யார் இந்த சிவப்பிரசாத்.. ஏன் கருணாநிதி வேடம் போட்டு போராட்டம்?
சித்தூர் எம்பி பாராளுமன்றத்திற்கு கருணாநிதி போல் உடையணிந்து வந்தார்.
Recommended Video
டெல்லி: மறைந்த கருணாநிதியே நாடாளுமன்றத்துக்கு வந்ததுபோல் ஒரு நிமிஷம் எல்லோரும் ஷாக் ஆகிவிட்டார்கள்!
தெலுங்கு தேச எம்பி நரமல்லி சிவபிரசாத்!! இவர் ஒரு வித்தியாசமானவர். போராட்டம், ஆர்ப்பாட்டம் என்றாலே அந்தமாநில மக்கள் உற்றுநோக்குவது சிவபிரசாத்தைதான்!!
கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திராவில் இவர் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டார். ஆந்திர மாநிலத்திற்கு மத்திய அரசு அநீதி இழைத்ததைக் கண்டிக்கும் வகையில், நடந்த போராட்டம் அது.
ஹிட்லர் வேஷம்
அதற்கு எம்பி சிவப்பிரசாத் தன் காதுகளில் பெரிய பெரிய தாமரை பூக்களை வைத்துக் கொண்டு வந்தார். திடீரென ஹிட்லர் வேடம் போடுவார், திடீரென சுதந்திர போராட்ட தியாகி போல கெட்-அப் மாறுவார்.
வித வித கெட்-அப்
இதேபோல கடந்த ஏப்ரல் மாதமும் ஒரு போராட்டம் நடத்தினார். அது ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி நடந்த நாடாளுமன்றத்தின் முன்பே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போதுதான் இவரது போராட்டத்தை நாடே வியந்து பார்த்தது. ஏனெனில் சிவபிரசாத், ஒவ்வொரு நாளும், நாரதர், நாட்டுப்புற கலைஞர், ஆடுமாடு மேய்ப்பவர், பரசுராமன் என புது புது தோற்றங்களில் பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.
கருணாநிதி
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று சிவபிரசாத் புது கெட்டப்பில் நாடாளுமன்றத்திற்கு வந்தார். மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதனால் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவபிரசாத் மறைந்த கருணாநிதி கெட்-அப்பில் இன்று அவைக்கு வந்தார்.
மஞ்சள் துண்டு
கருப்பு கண்ணாடி, மஞ்சள் துண்டு என்று வீல் சேரில் அவரை உட்கார வைத்து ஒருவர் தள்ளி கொண்டு வந்தார். அப்போது கருணாநிதி போலவே சிவபிரசாத் சேரில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையை தூக்கி காட்டி வந்தார். பிறகு சேரில் இருந்து எழுந்து நடந்து அவைக்குள் சென்றார். அப்போதும் கையை அசைத்து காட்டியபடிதான் சென்றார்.
திமுக ஆதரவு
பாஜகவுக்கு எதிராக ஒன்று சேரும் அணியை திரட்டி சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து, இதற்காக கூட்டங்களில் பங்கெடுத்து வருகிறார். இதன் காரணமாகவே, சிவபிரசாத் கருணாநிதி கெட்டப்பில் பாராளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்.