மோடியை கொல்ல ரூ.50 கோடி பேரம்.. பிஎஸ்எப் மாஜி வீரருக்கு எதிராக பாஜக வெளியிட்ட பரபரப்பு வீடியோ
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய முன்னாள் பிஎஸ்எப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ், ரூ.50 கோடி பேரம் பேசியதாக கூறி பாஜக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், இது பொய்யான வீடியோ என அந்த வீரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தேஜ் பகதூர் யாதவ்... இவரது பெயர் உங்களில் பலரும் அறிந்ததே. 2017ம் ஆண்டு இன்டர்நெட் வைரல் இவர் வீடியோதான். எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய தேஜ் பகதூர் யாதவ், தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக கூறி பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேஜ் பகதூர் யாதவ் செயல்பாடு, விதிமுறைகளுக்கு மாறானது என்று குற்றம்சாட்டி, அவர் எல்லை பாதுகாப்பு படையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இப்போது மீண்டும், தேஜ் பகதூர் யாதவ் செய்திகளில் அடிபடுகிறார். இதற்கு காரணம், பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பில் களமிறக்கப்பட்டதுதான்.
கெஜ்ரிவாலா அப்படி பேசினார்.. ஆச்சரியத்தில் தமிழர்கள்.. பரபரக்கும் "தமிழ் மாணவர் விரோத பிரச்சாரம்"
வேட்புமனு தள்ளுபடி
இருப்பினும், தேஜ் பகதூர் யாதவ் வேட்புமனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்டது. இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாஜக தேஜ் பகதூர் யாதவ் தொடர்பாக ஒரு பரபரப்பு வீடியோவை திடீரென வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மோடியை கொலை செய்ய, தேஜ் பகதூர் யாதவ் பேரம் பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வீடியோவில் இருப்பது நான்தான்
இதுகுறித்து தேஜ் பகதூர் யாதவ் நிருபர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: வீடியோவில் இருப்பது நான்தான் என்பதை மறுக்க மாட்டேன். டெல்லி காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த வீடியோ 2017ம் ஆண்டு ஷூட் செய்யப்பட்டது. நான் பணியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியபோது அந்த வீடியோவை எடுத்தார்.
இடைச்செருகல்
ராணுவ வீரர்களின் நிலை குறித்தும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் நான் அப்போது பேசினேன். ஆனால், மோடி மற்றும் கொலை குறித்து எதுவும் பேசவில்லை. இந்த வீடியோவில் சில குறிப்பிட்ட பகுதிகளை, ஜோடனை செய்துள்ளார்கள். இவ்வாறு, தேஜ் பகதூர் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.
பாஜக அதிர்ச்சி
பாஜக செய்தித் தொடர்பாளர், நரசிம்ம ராவ் கூறுகையில், மோடியை கொலை செய்ய நகர்ப்புற மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருந்ததை மகாராஷ்டிரா போலீசார் கடந்த வருடம் கண்டுபிடித்தனர். இப்போது இன்னொருவர் அதுவும், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரே மோடியை கொல்ல திட்டமிட்டது வெளியே வந்துவவிட்டது. ஜனநாயகம் மீது நம்பிக்கை இருந்தால் எல்லா கட்சிகளும் இந்த செயல்பாடுகளுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.