உங்க செல்போன் இன்டர்நெட் ஸ்பீட்டாக இல்லையே என்று குழப்பமா.. இனி அப்படித்தான்.. கொரோனாதான் காரணம்
டெல்லி: இந்தியாவில் செல்போன் பயனாளர்கள் ஏப்ரல் 14 வரை ஹெச்டி துல்லியத்தில் இணையதள சேவையை பெற முடியாது. ஆனால் பிராட்பேண்ட் பயனர்கள் இந்த முடிவால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
டிஜிட்டல் இன்டிஸ்ட்ரியின், அனைத்து நிறுவனங்களும் எச்டி மற்றும் அல்ட்ரா-எச்டி ஸ்ட்ரீமிங்கை எஸ்டி உள்ளடக்கத்திற்கு தற்காலிகமாக குறைப்பது அல்லது எஸ்டி கன்டென்ட் மட்டுமே வழங்குவது குறித்து முடிவு செய்துள்ளன. ஏப்ரல் 14 வரை செல்லுலார் நெட்வொர்க்குகளில் 480 பிக்சலுக்கு மேல் துல்லியம் இருக்காது, என்று பிரசார் பாரதி அறிவித்துள்ளது.
பிரசார் பாரதி ட்வீட்டுகளில் இதுபற்றி கூறுகையில், நேற்று ஸ்டார் அண்ட் டிஸ்னி இந்தியா தலைவர் உதய் சங்கர் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, மேலும் டிஜிட்டல் துறையைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதய் சங்கர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: இந்த கூட்டத்தில் என்.பி. சிங் (சோனி), சஞ்சய் குப்தா (கூகுள்), அஜித் மோகன் (பேஸ்புக்), சுதான்ஷு வாட்ஸ் (வியாகாம் 18), கவுரவ் காந்தி (அமேசான் பிரைம் வீடியோ), புனித் கோயங்கா (ஜீ), நிகில் காந்தி (டிக்டாக்), அம்பிகா குரானா (நெட்ஃப்ளிக்ஸ்) பேடி (எம்.எக்ஸ் பிளேயர்) மற்றும் வருண் நாரங் (ஹாட்ஸ்டார்) ஆகியோர் பங்கேற்றனர்.
தொலைதொடர்பு நிறுவனங்கள் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களுக்கும், அரசுக்கும் மார்ச் 21 அன்று கடிதம் எழுதியிருந்தன, தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க ஸ்ட்ரீமிங் தளங்களால் பயன்படுத்தப்படும் டேட்டாவை குறைக்க வேண்டும், ஏற்கனவே சமூக விலகல் மறும் லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு இடையே இணைய பயன்பாட்டின் தேவை அதிகரித்துள்ளதால், இணையதள சேவை பாதிக்கப்பட கூடாது என்பதற்கு இது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.
கடந்த 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஏழு நாள் காலகட்டத்தில் மொபைல் டிராபிக் 20 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தொலைத் தொடர்புத் துறையின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் , தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.