காசிபூர் எல்லையில் குவிக்கப்படும் உ.பி. போலீஸ்.. இரவோடு குவிந்த விவசாயிகள்.. பதற்றம் அதிகரிப்பு
டெல்லி: டெல்லி-காசிப்பூர் எல்லைப் பகுதியில் போராடும் விவசாயிகள் வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது போலீசாரும் அங்கு விவசாயிகளின் எண்ணிக்கையை நேரம் போகப்போக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது காசிப்பூர். இந்த பகுதியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை துண்டிப்பு செய்துள்ளது மாவட்ட நிர்வாகம். இந்த நிலையில்தான் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத். அப்போது அவர் உடைந்து அழுதுவிட்டார்.
இதன் பிறகு விவசாயிகள் கொந்தளித்துப் போய் கூட்டம் கூட்டமாக எல்லைப் பகுதிக்கு வர ஆரம்பித்துவிட்டனர். ராகேஷ் திகைத், பேசுகையில் தனது போராட்டம் தொடரும்.. உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.
இதனால் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நினைத்த விவசாயிகளும் அந்த முடிவை மாற்றிக்கொண்டு கூட்டமாக வந்துள்ளனர். வியாழக்கிழமை இரவு முதல் விவசாயிகள் எண்ணிக்கை காசிப்பூர் எல்லையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மேலும் பல விவசாயிகள் வெள்ளிக்கிழமையான இன்று வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் இன்று மகா பஞ்சாயத்து என்று அழைக்கப்படக்கூடிய விவசாயிகள் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது. அங்கு திரளாக விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் எல்லைப்புற பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். அதில் ஒரு முக்கியமான எல்லைப்பகுதி காசிப்பூர் என்பதாகும்.
உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக இங்கு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குடியரசு தின நாளில் டெல்லியில், ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும், என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. நேற்று இரவு முதல், இங்கு காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருவதால், அங்கு பதட்டம் நீடித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் என்று இன்னமும் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.