இந்த சீனாவை நம்பவே கூடாதுபோலயே.. கல்வானில் மட்டும்தான் கப் சிப்.. எல்லைகளில் தொல்லையை பாருங்க
டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவம் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பின் வாங்கியுள்ளது. அதேநேரம் இன்னும்கூட, இந்தியா-சீனா எல்லையில் டென்ஷன் குறைந்தபாடு இல்லை. இதற்கு காரணம் இருக்கிறது.
கல்வான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்த போது, அதை தடுத்த நமது நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் கொல்லப்பட்டார்களா? எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற தகவலை அந்த நாட்டு அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இருப்பினும் ராணுவ வட்டார தகவல்களின்படி சுமார் 30 சீன வீரர்கள் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அடிபணிந்த சீனா.. எல்லையில் திடீரென பின்வாங்கியது ஏன்? சீன வெளியுறவுத்துறை கொடுத்த விளக்கம்!
அஜித் தோவல் பேச்சுவார்த்தை
இந்த நிலையில், இரு நாட்டு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சுமார் 2 மணி நேரம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த நிலையில்தான் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து பதட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது.
பதற்றம் தணியவில்லை
சீன படைகள் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரபூர்வமாக சீனாவும் இதை ஒப்புக் கொண்டு இருக்கிறது. இதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால் எல்லையில் முழுமையாக பதட்டம் குறைந்ததா என்றால், இல்லை என்பதுதான் பதில்.
பிற பகுதிகளில் சீனா முகாம்
இப்போது சீன படைகள் பின்வாங்கி உள்ள பகுதி என்பது பிபி14 பகுதி. இங்குள்ள கூடாரங்கள் உள்ளிட்டவற்றை கழட்டி தங்களது வாகனங்களில் வைத்துக் கொண்டு சீனப் படைகள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பின்னர் சென்றுள்ளனர். இந்த பகுதி முன்பு எப்படி இருந்ததோ அதே நிலையில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னமும் பிபி15, பிபி17ஏ, கோக்ரா ஆகிய ஹாட் ஸ்ப்ரிங் ஏரியாவில் உள்ள பகுதிகளில் சீன படைகள் முகாமிட்டுள்ளன.
இப்போதைக்கு வாபஸ் இல்லை
மேலே குறிப்பிட்ட இந்த ஒவ்வொரு இடத்திலும் தலா சுமார் ஆயிரம் சீன நாட்டு ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். முன்பு இதைவிட அதிகமாக ராணுவ வீரர்கள் இருந்ததாகவும் தற்போது அந்த எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது என்றும் தெரிகிறது. இருப்பினும் முழுமையாக அவர்கள் விலகி தங்கள் நாட்டின் எல்லைக்குள் செல்லவில்லை. தொடர்ந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அதில் முடிவுகள் எட்டப்பட்ட பிறகுதான் இவர்கள் பின் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அல்லது எந்த மாதிரியான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுப்பார்கள் என்பதை பார்க்க வேண்டியுள்ளது.
அடுத்த பேச்சுவார்த்தை
இதே போன்று Pangong Tso பகுதியிலும் சீன ராணுவம் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. 6ம் தேதியான நேற்று வரை இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவில் மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. அடுத்த சுற்று பேச்சுவார்த்தை ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவரை நாம் குறிப்பிட்ட இந்த இடங்களில் இருந்து சீன நாட்டு ராணுவம் பின்வாங்கப் போவதில்லை என்று தெரிகிறது. எனவே இந்திய ராணுவம் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியா ரோந்து
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவத்தினர் பின்வாங்கி விட்டதாக தெரிவித்தாலும் கூட இந்தியா அதை நம்பத் தயாராக இல்லை. எனவே நேற்று இரவு முழுக்க இந்திய ராணுவத்தின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் இந்த எல்லைப் பகுதியில் பறந்தபடி சீன ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து உள்ளன. எனவே எல்லையில் இன்னும் முழுமையாக பதட்டம் தணியவில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. அது தணிய வேண்டும் என்பது இரு நாடுகளின் மக்கள் விருப்பம் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலக மக்களின் விருப்பமாக உள்ளது.