தீவிரவாத குழுக்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கையில் சரிவு.! மத்திய அரசு தகவல்
டெல்லி: தீவிரவாத இயக்கங்களில் சேரும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளதாக, உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாலக்கோட்டில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு பின், ஜம்மூ- காஷ்மீரில் எல்லை தாண்டிய ஊடுருவல் குறைந்துள்ளதா என மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நிதியானந்த் ராயிடம் எழுத்து பூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய ராய், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது எல்லை தாண்டிய ஊடுருவல் கடந்த 6 மாதத்தில் மட்டும் 43% குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் பாலக்கோட்டில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு பின், காஷ்மீாில் தீவிரவாதம் சார்ந்த சம்பவங்கள் 28 சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ளார். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் கிஷன் கூறியுள்ளார்.
மேலும் மாநிலங்களவையில் பல கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கிஷன் ரெட்டி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவான 370ஐ நீக்கம் செய்வது தொடர்பான விவகாரத்தில் வெளிநாட்டு அமைப்புக்கோ, அரசுகளுக்கோ தொடர்பு இல்லை என்றார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இது தொடர்பாக எந்நாட்டு அரசுகளும் தலையிட உரிமையில்லை. எல்லை தாண்டிய ஊடுருவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு , எல்லைகளில் மின்சார வேலி அமைத்தல், மேம்பட்ட உளவுத்துறை மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, மேம்பட்ட தொழில்நுட்ப ஆயுதங்களுடன் பாதுகாப்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருப்பது மற்றும் ஊடுருவல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என, பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும் இந்தோ-பாக் எல்லையில் கட்டுப்பாட்டிலுள்ள மின் வேலி, ஊடுருவல் தடுப்பு அமைப்பு ஆகியன தீவிரவாதிகளின் ஊடுருவலுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
AIOS க்கான மின்சார தேவைகள்பவர் கிரிட் மூலமாகவும், பிற இடங்களில் ஜெனரேட்டர்கள் மூலமாகவும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.