பள்ளி மாணவி தற்கொலை.. நேரில் விசாரிக்க தமிழகம் வருகிறார் என்சிபிசிஆர் தலைவர்..அதிகாரிகள் மீது புகார்
டெல்லி: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனங்கோ தஞ்சாவூருக்கு வர உள்ளார்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மீண்டும் ஆல் பாஸ்? அரசு தீவிர ஆலோசனை.. வெளியான பரபர தகவல்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை
வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார். மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவி தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது.
என்சிபிசிஆர் தலைவர் தமிழகம் வருகை
இந்த நிலையில்தான் மாணவி தற்கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்சிபிசிஆர்) தலைவர் பிரியங்க் கனங்கோ தஞ்சாவூருக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஜனவரி 30 மற்றும் 31 -ம் தேதிகளில் தஞ்சாவூருக்கு வர வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசிடம், என்சிபிசிஆர் ஏற்கனவே விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக என்சிபிசிஆர் தலைவர் பிரினாக் கனூங்கோ கூறியதாவது:-
தமிழக அரசுக்கு நேட்டீஸ்
மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக என்சிபிசிஆர் ஜனவரி 21 அன்று மாநில(தமிழ்நாடு) டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த சம்பவத்தில் உண்மை அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும், சிறுமி மற்றும் அவரது பெற்றோரின் அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மாநில டிஜிபியிடம் இருந்து எங்களுக்கு இதுவரை எந்த ரிப்போர்ட்டும் வரவில்லை.
அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்
எனவே நான் தஞ்சாவூருக்கு சென்று முதற்கட்ட விசாரணை நடத்தி சிறுமியின் பெற்றோரை சந்திக்க உள்ளேன். நானும் பள்ளிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்வேன். குழந்தைகள் உரிமைகள் அமைப்புக்கு தகவல் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். அதனால்தான் இந்த விஷயத்தை ஆராய நான் அந்த இடத்திற்குச் செல்கிறேன். இதுபோன்ற பெண்கள் வசிக்கும் மற்றும் படிக்கும் தங்குமிடங்களைக் கண்காணிப்பது தொடர்பாக சில மாநில அரசுகள் ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் இன்னும் முறையான கண்காணிப்பு பொறிமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம. இவ்வாறு பிரியங்க் கனங்கோ தெரிவித்தார்.