வெளியுறவு அமைச்சராக மக்களுக்கு சேவை புாிய வாய்ப்பு வழங்கிய மோடிக்கு நன்றி.. சுஷ்மா ஸ்வராஜ் உருக்கம்
Recommended Video
டெல்லி: மோடியின் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், மக்களுக்கு சேவை புரிய பிரதமர் தனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 350 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டுமே 303 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
இதனையடுத்து மோடி மீண்டும் பிரதமராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள், வெளிநாட்டு தலைவர்கள், தூதர்கள், பிரபலங்கள் என சுமார் 8000 போ் பங்கேற்றனர்.
மோடியுடன் சேர்த்து மத்திய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் என 57 பேர் பதவியேற்றனர். மோடியின் கடந்த கால அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் நடப்பு மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
இருவருக்குமே கடந்த சில காலமாக அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. அருண் ஜேட்லி கடிதம் மூலம் தம்மால் இம்முறை மத்திய அமைச்ரவையில் இடம் பெற முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனையடுத்து பிரதமர் மோடியே அருண் ஜேட்லியின் இல்லத்திற்கு நேரில் சென்று பேசி பார்த்தார்.
ஒரே ஒரு அமைச்சர் பதவி தானா? அமித்ஷா ஆஃபரை நிராகரித்த நிதிஷ் 'கடுகடு'
ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த அருண் ஜேட்லி முக்கிய நேரங்களில், வெளியில் இருந்து தகுந்த ஆலோசனைகள் தர தயாரக உள்ளதாகவும், மத்திய அமைச்சர் பொறுப்பை தம்மை சுமக்க வைக்க வேண்டாம் என்றும் பிரதமரிடம் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மோடி மற்றும் பிற அமைச்சர்கள் பதவியேற்கும் வரை, யார் யார் பொறுப்பேற்க போகிறார்கள் என்பது கடைசி வரை மர்மமாகவே நீடித்தது. அருண் ஜேட்லி அமைச்சரவையில் இடம் பெற போவதில்லை என்பது உறுதியான நிலையில், மூத்த தலைவர் சுஷ்மா இடம் பெறுவார் என கடைசி வரை கூறப்பட்டது.
ஆனால் பதவியேற்பு நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் வரிசையில் சுஷ்மா அமர்ந்ததை அடுத்து, அவரும் மத்திய அமைச்சரவை பட்டியலில் இல்லை என்பது கடைசி நேரத்தில் தான் தெரிய வந்தது. சமூகவலைதளங்களில் மக்கள் யாரேனும் இவரிடம் பிரச்சனைகளை தெரிவித்தால் விரைந்து தீர்த்து வைத்ததை அடுத்து, மிகவும் பிரபலமான அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ்.
இவரும் சிறிது காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால் அமைச்சர் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
प्रधान मंत्री जी - आपने 5 वर्षों तक मुझे विदेश मंत्री के तौर पर देशवासियों और प्रवासी भारतीयों की सेवा करने का मौका दिया और पूरे कार्यकाल में व्यक्तिगत तौर पर भी बहुत सम्मान दिया. मैं आपके प्रति बहुत आभारी हूँ. हमारी सरकार बहुत यशस्विता से चले, प्रभु से मेरी यही प्रार्थना है.
— Sushma Swaraj (@SushmaSwaraj) May 30, 2019
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து சுஷ்மா கருத்து பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் தமக்கு, கடந்த 5 ஆண்டுகள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து மக்களுக்கு சேவை புரியும் வாய்ப்பை அளித்தார். இதற்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் மக்களவை தேர்தலில் அசாத்திய வெற்றி பெற்று மீண்டும் அமைந்துள்ள பாஜக ஆட்சி, வெற்றிகரமாக நடைபெற இறைவனை பிரார்த்திப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.