லாக்டவுன் முழு தோல்வி.. சொதப்பிய ஒரே நாடு இந்தியாதான்.. என்னாச்சு 21 நாள் கெடு? ராகுல் காந்தி ஆவேசம்
டெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு அமல்படுத்திய லாக்டவுன் வியூகம் முழு தோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், முன்னணித் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மூத்த செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் மத்திய அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் அவர் கூறியதை பாருங்கள்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இப்போது லாக் டவுன் நடைமுறைகளை தளர்த்திக் கொண்டு இருக்கிறது.
திருச்சி டூ அமெரிக்கா.. கம்மி விலையில் கொரோனா வென்டிலேட்டர்கள்.. குமுதா தம்பதி ஹேப்பி அண்ணாச்சி!
இந்தியா மட்டுமே
உலகத்திலேயே, கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது, லாக்டவுனை தளர்த்தியது இந்தியாவில்தான். லாக்டவுன் எதற்காக கொண்டுவரப்பட்டதோ, அந்த வியூகம் சுத்தமாக தோல்வி அடைந்து விட்டது. தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதற்கு காரணம் லாக்டவுன் தோல்வியடைந்ததுதான். நான்கு கட்ட லாக்டவுனும், பிரதமர் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை என்பது தெளிவாகிறது.
காங்கிரஸ் அரசு
காங்கிரஸ் ஆளக்கூடிய மாநிலங்களில் ஏழைகளுக்கு நிதி உதவி, உணவு வசதிகள் உள்ளிட்டவற்றை செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் மாநில அரசுகளால் தன்னிச்சையாக அனைத்து உதவிகளையும் செய்து விட முடியாது. ஒருவேளை, மாநிலங்கள், சுயாட்சி பெற்ற மாநிலங்களாகவே தொடர்ந்து இருந்திருந்தால் அது சாத்தியபட்டிருக்கும். ஆனால் மத்திய அரசு, மாநிலங்களின் உரிமையை பறித்து கொண்டு, உரிய உதவிகளை செய்ய விடாமல் தடுத்து வருகிறது.
அடுத்து என்ன
கொரோனா வைரஸ் பாதிப்பை எப்படித் தடுக்கப் போகிறோம் என்பது குறித்து மத்திய அரசிடம் இதுவரையில் ஒரு தெளிவான பார்வை இல்லை. 21 நாட்களில் கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இப்போது 60 நாட்கள் கடந்து விட்டது. ஆனால் பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
|
மோசமான வேலைவாய்ப்பு பிரச்சினை
இந்தியா கடந்த பல ஆண்டுகளாகவே வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகுதான், இந்த பிரச்சனை ஆரம்பிக்கவில்லை. மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் நம் காதுகளில் விழுந்தன. ஆனால் அதனால் யாருக்காவது வேலை வாய்ப்பு கிடைத்ததா என்றால், இல்லை என்பதுதான் பதில். ஒரு தேசிய தலைவராக இருந்து கொண்டு நான் இப்படி சொல்ல வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது சிறு குறு நிறுவனங்களை நடத்தியோரும் தங்கள் தொழிலை நிறுத்தி விட்டு வேலை இல்லாமல் போகக்கூடிய நிலைமை தான் நாட்டில் இருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.