சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை மார்ச் 31 வரை நீட்டிப்பு!
டெல்லி: சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவைக்கான தடை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமானப் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்புகள் 15,000-க்கு மேல் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இது போதாதென்று இங்கிலாந்தில் உருமாறிய தொற்று வேறு அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் ஆறுதல் அளிக்கும் படியாக ஓரளவு தொற்று கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனாவை பெருமளவு குறைத்து விட்டன.
மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் பாதிப்பு
ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அடங்க மறுக்கிறது. கேரளாவில் தினமும் 5,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவில் 3 மாதங்களுக்கு பிறகு 6,000-க்கும் மேல் பாதிப்புகள் பதிவாகி மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் 15,000-க்குள் இருந்த பாதிப்புகள் கடந்த சில நாட்களாக 15,000-க்கு மேல் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு
இதனால் கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசியை மாநிலங்கள் மக்களுக்கு செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவைக்கான தடை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சரக்கு விமானங்கள் இயங்கும்
இந்த விமானப் போக்குவரத்து ரத்து உத்தரவால் சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட சரக்கு விமானப் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேசமயம், குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடியவகையில் நிலைமைக்கு ஏற்ப பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவை அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.