5 மாநில தேர்தல் தோல்வி தந்த பாடம்.. விவசாயிகளுக்கு 3 முக்கிய திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு தயார்
Recommended Video
டெல்லி:2019-ம் ஆண்டு லோக் சபா தேர்தலை முன்வைத்து விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன், பயிர் கடனுக்கு ப்ரிமியம் தள்ளுபடி போன்ற திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அண்மையில் பாஜகவுக்கு தோல்வியை அள்ளித் தந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில தேர்தல்கள் அக்கட்சியை ஒரு பக்கம் தீவிர ஆலோசனைக்கு இட்டு சென்றுள்ளது. ஆட்சி போனது ஒருபுறம் இருக்க, பாஜகவின் இரட்டை சகோதரர்கள் என்று விளிக்கப்பட்ட மோடியையும், அமித் ஷாவையும் சொந்த கட்சியினரே விமர்சிக்க ஆரம்பித்தனர்.
அடுத்த பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்ற அடையாளத்துடன் வந்து கொண்டு இருக்கும் நிதின் கட்கரியும் தமது பங்குக்கு தோல்வி வெடியை பற்ற வைக்க கொஞ்சம் அதிர்ந்துதான் போனது பாஜக தலைமை. தேர்தல் தோல்விக்கான காரணங்கள் என்று ஒரு பட்டியலை மக்களிடம் வாசித்தாலும் மீண்டும் 2019 லோக்சபா தேர்தலை தனதாக்கி கொள்ள தீவிர ஆலோசனையில் பாஜக ஈடுபட்டுள்ளது.
தோல்வி எப்படி கிடைத்தது
தேர்தல் தோல்விக்கான ஆராய்ச்சியில் பாஜகவுக்கு சில புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. அதில் மிக முக்கியமாக அரசு மீது விவசாயிகள் கொண்டிருக்கும் அதிருப்தி முக்கிய காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விவசாயிகளை திருப்திப்படுத்தவும், எதிர்வரும் மக்களவை தேர்தலைச் சந்திக்கவும் இந்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
ஆலோசிக்கும் மத்திய அரசு
இந்த திட்டம் தொடர்பாகக் கடந்த சில நாட்களாக மத்திய அரசு உயர் மட்ட அளவில் பல்வேறு ஆலோசனைகளையும், நடைமுறை சாத்தியங்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியது. அப்போது, விவசாயிகள் தொடர்ச்சியாக சந்தித்துவரும் பிரச்சினைகள், விளைபொருட்களுக்கான விலை நிலவரம், கடன் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வருகிறது புதிய சலுகைகள்
அதனை தொடர்ந்து மத்திய பாஜக அரசு பல புதிய சலுகைகளையும், திட்டங்களையும் அறிவிக்கலாம் என்று முடிவு செய்துள்ளது. அந்த புத்தாண்டு அறிவிப்புகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. அதன்படி, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வங்கியில் பெற்ற கடனுக்குத் தொடர்ந்து முறையாகச் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு வட்டியில் 4 சதவீதத்தை உடனடியாக தள்ளுபடி செய்து அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக மத்திய அரசு இதனை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.
தள்ளுபடியாகிறது வட்டி
அதற்கு அடுத்தபடியாக, குறுகிய காலக்கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்துவிடலாம் என்று பாஜக அரசு எண்ணுகிறது. அதாவது, தற்போது விவசாயிகளுக்குக் குறுகிய காலக் கடனாக ரூ.3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் அரசு வழங்குகிறது. அதில் சரியாக கடனைச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது. தற்போது, மீதமுள்ள 4 சதவீதத்தையும் தள்ளுபடியாக அளிக்கலாமா என்று மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடன் வழங்க முடிவு
அதே போல், நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. வழக்கமாக வட்டி தள்ளுபடி மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு வருகிறது. இப்போது இந்த வட்டித் தள்ளுபடியையும் சேர்த்தால் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக சுமை அதிகரிக்கும். ஆனாலும் பரவாயில்லை என்ற முழக்கத்துடன் களமிறங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரிமியம் தொகை?
மேலும் பிரதான் மந்திரி பைசல் பிமா யோஜனா என்ற திட்டம் மூலம் விவசாயிகளின் பிரிமியம் சுமையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு பிரிமியம் தொகை முழுவதையும் தள்ளுபடி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு பிரிமியம் தொகையை பாதியாக குறைத்தல் என்ற திட்டங்களையும் மத்திய அரசு மனதில் வைத்துள்ளது. ஆக மொத்தம் 2019ம் ஆண்டு விவசாயிகளுக்கான புத்தாண்டு பரிசு என்ற அடைமொழியுடன் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது பாஜக.... பார்ப்போம்... என்ன நடக்கிறது என்று....