தாவி வரும் ‘குரங்கு காய்ச்சல்”! இத்தனை நாடுகளில் பாதிப்பா? மாநிலங்களை அலர்ட் செய்யும் மத்திய அரசு!
டெல்லி : குரங்கு காய்ச்சல் என புனைப்பெயரில் அழைக்கப்படும் மங்கி பாக்ஸ் கடந்த 10 நாட்களில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் மாநிலத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதற்கடுத்து உலகம் முழுவதும் தனது கிளைகளைப் பரப்பி இலட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பாதிப்பு குறையாமல் கொரோனா டெல்டா, ஆல்ஃபா, ஓமிக்ரான், கொரோனா எக்ஸ் ஈ என அடுத்தடுத்து மாறுபாடுகளை கடந்து தற்போது வரை உலக மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது என்றே கூறலாம்.
உலகம் முழுதும் வேகமெடுக்கும் குரங்கு அம்மை! ‛அலர்ட்‛டான கேரளா, மகாராஷ்டிரா! நடந்தது என்ன? பரபர தகவல்
குரங்கு காய்ச்சல் பாதிப்பு
இந்த நிலையில் உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. 1958 ஆம் ஆண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளில் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாகவே இவ்வகை வைரஸுக்கு விஞ்ஞானிகள் குரங்கு பாக்ஸ் என பெயரிட்டனர். பின்னர் இது குரங்கு காய்ச்சல் என மாறியது. 1970-ஆம் ஆண்டில் தான் மனிதனுக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வேகமாக பரவல்
இந்நிலையில் திடீரென இவ்வகை வைரஸ் பாதிப்பு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவ தொடங்கி பல்வேறு நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு தென்பட்டு உள்ளது. இதைத் தவிர, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவிலும், இந்த நோய்த் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, மிகுந்த உடல் சோர்வு, கணுக்கால் வீக்கம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ள நிலையில், பெரியம்மை போன்ற பாதிப்புகளையும் இவ்வகை வைரஸ் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குரங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதால் இந்த நோய் 'மங்கி பாக்ஸ்' என அழைக்கப்படும் நிலையில், அணில், குரங்கு போன்ற சிறிய வகை விலங்குகள் கடிப்பதாலும், நோய் வாய்ப்பட்டவரின் உடல் திரவங்கள், முத்தம் போன்ற நேரடி தொடர்பு காரணமாக இது பரவலாம் எனவும் கூறப்படுகிறது.
மக்கள் அச்சம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடப்பு ஆண்டில் முதல் முறையாக கேரளாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு முதல் நபர் ஆளாகியிருந்தார். இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மாநில சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர். அதன் பிறகு பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இல்லாத நிலையில் தற்போது வெளிநாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருவது மருத்துவ நிபுணர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 100ஐ நெருங்கி வருகிறது.
மத்திய அரசு எச்சரிக்கை
சுவீடனில் இந்த தொற்று பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இந்த நோய் ஆபத்தான நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது மிகவும் அசாதாரண நிகழ்வாக கருதப்படுவது ஆக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவிலுள்ள மாநில அரசுகள் குரங்கு காய்ச்சல் குறித்து தீவிரமாக கண்காணிக்குமாறும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.