கோப விவசாயிகளை கூல் செய்த அரசு - ரபி பருவ பயிர்களுக்கு குவிண்டாலுக்கு ரூ.50-300 வரை எம்எஸ்பி உயர்வு
வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் கோபமடைந்துள்ள விவசாயிகளை சாந்தப்படுத்த மத்திய அரசு ரபி பருவ விவசாயப் பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு 50 முதல் 300 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
டெல்லி: நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மத்திய அரசு மீது கோபமடைந்துள்ள விவசாயிகளை சாந்தப்படுத்தும் வகையில் 2021-22 ரபி பருவத்திற்கான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரபி பயிர்களுக்கு குவிண்டாலுக்கு 50 முதல் 300 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திங்களன்று லோக்சபாவில் அறிவித்துள்ளார்.
எம்எஸ்பி உயர்வு ரூ.50 முதல் ரூ.300 வரை இருக்கும் என்று தோமர் கூறினார், முந்தைய நாள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அவர் அறிவித்தார். கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சன்னா ரூ.250க்கும், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.300 உயர்த்தப்பட்டுள்ளது. கடுகுக்கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ. 225 உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கரீஃப் மற்றும் ரபி ஆகிய இரண்டு முக்கியப் பருவங்களுக்கு விவசாயப் பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை அறிவிக்கப்பட்டு வருகிறது. இது 1965ஆம் ஆண்டில் இருந்து மத்திய விவசாய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விவசாய செலவு மற்றும் விலைக் குழுவின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகிறது.
வேளாண் மசோதா.. ஏதோ பேச்சின் ஊடே அப்படி பேசிவிட்டார்.. மத்தபடி முதல்வரின் நிலைப்பாடே இறுதி- அமைச்சர்
தற்போது ஏழு தானியங்கள், ஐந்து பருப்புப் பயிர்கள், ஏழு எண்ணெய் வித்துக்கள், நான்கு வணிகப் பயிர்கள் தேங்காய், கரும்பு, பருத்தி, சணல் உட்பட மொத்தமாக 23 பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது.
சாகுபடிச் செலவு, இடுபொருட்களின் விலை, விவசாயப் பயிர்களின் அளிப்பு மற்றும் தேவை, உலகச் சந்தையில் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் ஆகிய முக்கியக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது.
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு.. தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் 3 வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன, தேஜகூவில் உள்ள சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத்கவுர் பாதல் ராஜினாமா செய்தார்.
இது விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்களுக்கு, தனியார்களுக்கு சாதகமானது, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப்பாதுகாப்பை அழிப்பது என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மத்திய அரசு மீது விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர், இந்த மசோதாக்கள் போட்டியை அதிகரித்து தனியார் முதலீட்டை இந்த துறையில் ஈர்க்கும் இதனையடுத்து வேளாண் உள்கட்டமைப்பு வளர்ச்சியடைய உதவும். வேலை வாய்ப்பு உருவாகும் என்று கூறியுள்ளார்.
இவையெல்லாம் குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற விவசாய நலத்திட்டத்திலிருந்து முற்றிலும் அரசு விலகுவதற்கான சுவடுகளே என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை மறுக்கும் வேளாண்துறை அமைச்சர், குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் முறை இருக்கும், உறுதி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு தினங்களாக ராஜ்யசபாவில் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் அமளி துமளி ஏற்பட்டது.
இதனிடையே இன்று நரேந்திரசிங் தோமர் ரபி பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 50 முதல் 300 ரூபாய் வரை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதன் மூலம் மத்திய அரசு மீது விவசாயிகள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த உள்ளனர். இந்த சூழ்நிலையில் விவசாயிகளை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியுள்ளது.
உயர்த்தப்பட்ட விலையின் மூலம் மசூர் ஒரு குவிண்டாலுக்கு ரூ.5100ஆக அதிகரித்துள்ளது. கடுகு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4650 ஆகவும், கோதுமை ஒரு குவிண்டால் ரூ.1975ஆகவும் பார்லி ஒரு குவிண்டால் ரூ.1600ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.