ஆதார் இருந்தா தான் விவசாயிகளுக்கு ரூ.6,000 தருவோம்.. செக் வைத்த மத்திய அரசு
Recommended Video
டெல்லி:மத்திய அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக அந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், அடுத்த மாதத்துக்குள் விவசாயிகளுக்கு முதல் தவணையை செலுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. திட்டத்துக்கு தகுதியான விவசாயிகளின் தகவல்கள் அனைத்து மாநிலங்களின் உதவியுடன் நாடு முழுவதும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதற்காக, மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் மாநிலங்கள் அனைத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரையுள்ள 4 மாத காலத்துக்கான உதவித்தொகை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் போலியான நபர்கள் பயனடைவதைத் தடுக்கும் நோக்கில், தகுதியான விவசாயிகளிடமிருந்து தகவல்களை பெறும் போது, அவர்களின் ஆதார் எண்ணையும் பெற வேண்டும். முதல் தவணைத்தொகையைப் பெற ஆதார் எண் கட்டாயமில்லை.
ஆனால், 2வது தவணை பெற ஆதார் எண் கட்டாயம். அந்த ஆதார் எண் அளித்த விவசாயிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து விவசாயிகளிடமிருந்தும் ஆதார் எண் பெறப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். கணவன், மனைவி, 18 வயதுக்குள்ளான குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம், மாநில நிலஅளவைப் பதிவுகளின்படி பிப்ரவரி 1, 2019 அன்று 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்க வேண்டும்.
எனவே, திட்டத்துக்கு தகுதியான விவசாயிகளிடமிருந்து பெயர், ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை மாநிலங்கள் சேகரிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.