இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.... வடமாநில மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
டெல்லி : வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களில் இயல்பை காட்டிலும் அதிக வெப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கடந்த வாரம் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்தாண்டு நாட்டிலேயே அதிகபட்ச வெப்பமாக, ராஜஸ்தானில் கடந்த வாரம் 50.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இந்தநிலையில், ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லி, பஞ்சாப் மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை மற்றும் புழுதி புயலுடன் மணிக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தீவிரமடையும் பருவமழை.. நாளை பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் வார்னிங்!
அதே நேரம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அசாம், மேகாலயா, கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையின் தென்பகுதியில் 3 நாட்களுக்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இலங்கையில் பருவமழை தொடங்கினால் 2 நாட்களுக்குள் கேரளாவிலும் மழை தொடங்க வேண்டும். ஆனால் அரபிக்கடலின் மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பருவமழை தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. இருப்பினும் நாளை முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு பருவ மழையின் போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாநிலங்களான கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக மழைப்பொழிவை பெறும் என்று கூறப்பட்டுள்ளது.