உண்மையை மக்களிடம் கூறுவது தேச பக்தி.. மறைப்பது தேசதுரோகம்...ராகுல் காந்தி!!
டெல்லி: ''இந்திய நிலப்பகுதியை பொருத்த வரையில் என்றும் உண்மையைத்தான் பேசுவேன். அரசியல் ரீதியாக எனக்கு பாதிப்பு என்று கூறினாலும் கூட நமது லடாக் பகுதியில் சீனர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறார்கள் என்ற செய்தியில் நான் பொய் கூற மாட்டேன்'' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மறைமுகமாக பிரதமர் மோடியை சாடியுள்ளார்.
கொரோனா துவங்குவதற்கு முன்பிருந்தே ஆளும் பாஜக மற்றும் பிரதமர் மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். இந்த நிலையில் மத்திய அரசை விமர்சித்து வீடியோவும் வெளியிட்டு வருகிறார்.
முன்னதாக இரண்டு வீடியோ வெளியிட்டு இருந்த நிலையில் இன்றும் ஒரு வீடியோவை ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை தனது ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், ''சீனர்கள் நமது எல்லையில் நுழையவில்லை என்று பொய் கூறச் சொன்னாலும் நான் சொல்ல மாட்டேன். என்னுடைய அரசியல் வாழ்க்கையே போனாலும் பரவாயில்லை என்று உண்மைதான் கூறுவேன்.
இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்துள்ளது. என்னுடைய ரத்தம் கொதிக்கிறது. எப்படி அடுத்த நாட்டினர் நமது எல்லைக்குள் வர முடியும். இந்த விஷயத்தை மறைப்பது தேச துரோகம். உண்மையை மக்களிடம் கூறுவதுதான் தேச பக்தி.
இந்திய நிலப்பகுதியை பொறுத்தவரை நான் பொய் கூற மாட்டேன். இந்தியன் என்ற வகையில் எனது முக்கியத்துவம் எல்லாம் எனது தேசம் எனது மக்கள்தான்'' என்று தெரிவித்துள்ளார்.
பெரும் தலைவலியாக மாறும் சீனா.. லடாக் எல்லை மட்டுமல்ல.. திபெத் எல்லையில் ராணுவத்தை குவிக்கிறது
இந்திய, சீன எல்லையில் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்து இருக்கிறது என்பதையும், மத்திய பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடி இதை மறைக்கின்றனர் என்று தொடர்ந்து ராகுல் காந்தி கூறி வருகிறார். மேலும், மோடியை மறைமுகமாக இந்த வீடியோவில் ராகுல் காந்தி சாடியுள்ளார். இதற்கு முன்னதாக வெளியான வீடியோவிலும் மோடியை விமர்சித்து இருந்தார். தனி மனித இமேஜை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மோடி அமைதியாக இருக்கிறார். மோடிக்கு எது முக்கியம் என்பது சீனாவுக்கும் தெரியும். அதை வைத்துதான் சீனாவும் மோடியை அடிபணிய வைக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.
இவருக்கு பதிலடி கொடுத்து இருக்கும் பாஜக, ''நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை விமர்சித்து, அவர்கள் செய்த முந்தைய பாவங்களான 1962ல் நடந்த சம்பவத்துக்கும், இந்தியாவை பலவீனப்படுத்தியதற்கும் ராகுல் காந்தி பரிகாரம் தேடுகிறார்'' என்று தெரிவித்துள்ளது.