காங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.. உறுதியாய் சொன்ன மூத்த தலைவர்கள்
Recommended Video
டெல்லி: மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி எடுத்த ராஜினாமா முடிவை, காங்கிரஸ் கட்சியின் செயற்குழு நிராகரித்துவிட்டதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க கூடிய காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நிறைவு பெற்றது. இதனையடுத்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாமி நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
சந்திப்பின் போது பேசிய சுர்ஜேவாலா, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் ராஜினாமா செய்வதாக கூறியதை நிராகரித்து விட்டதாக கூறினார். காங்கிரஸ் கட்சியில் அனைத்து விதமான முடிவுகளை எடுக்கவும் ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
கட்சியை மறுசீரமைப்பு செய்யவும், நிர்வாக மாற்றங்களை ஏற்படுத்தவும் ராகுலுக்கு முழுஅதிகாரம் வழங்கியுள்ளதாக கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவைப்படுவதாக உறுதிபட தெரிவித்தார்.
நாட்டு மக்களின் முடிவை மனதார ஏற்பதாக கூறிய அவர், காங்கிரஸ் எதிர் கட்சியாக இருந்து தனது பணிகளை செய்யும் என குறிப்பிட்டார். மேலும் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய காங்கிரஸ் தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணிக்கு 12 கோடியே 13 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகாதவாறு, ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக காங்கிரஸ் செயல்படும் என்றார். மேலும் பேசிய அவர் விவசாயிகள் நலன்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
WATCH via ANI FB: Congress party addresses a press conference in Delhi. https://t.co/3mo97GEPcV pic.twitter.com/F2WrAU13bA
— ANI (@ANI) May 25, 2019
கட்சியின் மூத்த தலைவர் அந்தோணி பேசுகையில் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை ஆனால் இது பெரும் சரிவல்ல. முழுமையாக ஆய்வு செய்த பின்னரே விரிவாக விவாதிப்போம். ராகுல் காந்தி இனி என்ன செய்வார் என்பதை நான் எதுவும் சொல்ல முடியாது என்றார்
பின்னர் பேசிய குலாம் நபி ஆசாத் கூறுகையில் தோல்விக்கு பொறுப்பேற்க ராகுல் காந்தி தயாராக இருந்தார். ஆனால் தோல்விக்கான பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொண்டோம். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி, கடுமையாக உழைத்த கட்சி தலைவர் ராகுலுக்கும் நன்றி என்றார்