18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்... விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு
டெல்லி: இன்னும் 18 மாதங்களில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த 2.77 ஏக்கர் நிலம் குறித்த சர்ச்சையை பேசி தீர்த்துக் கொள்ள நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ ராம் பஞ்சு உள்ளடக்கிய குழுவை சமரச பேச்சு வார்த்தைக்கான குழுவாக உச்ச நீதி மன்றம் நியமித்து உள்ளது.
இந்தக் குழு நிர்மோகி அரோரா, வக்பு வாரியம் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வழக்கம் போல பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
பொறுமை காக்க முடியாது
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார், 2-வது முறையாக பிரதமராக வந்திருக்கும் மோடிக்கு ராமர் கோயில் கட்டுவது குறித்து நினைவுபடுத்த விரும்புகிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் இனிமேலும் நாங்கள் பொறுமை காக்க முடியாது என்று தெரிவித்தார்.
சமரசம் கிடையாது
தொடர்ந்து பேசியவர் முதலில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதில் உறுதியாக இருக்கிறோம். 2-வதாக அயோத்தியின் கலாச்சாரம் தொடர்பான பகுதிக்குள் எந்தவிதமான மசூதியும் இருக்கக் கூடாது ஆகிய இரு விஷயங்களில் விஹெச்பி சமரசம் செய்து கொள்ளாது என்று உறுதிபட தெரிவித்தார்.
மோடியிடம் ஒப்படைக்கப்படும்
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டும் திட்டம் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்துவோம் என்றவர் ஹரித்துவாரில் வரும் 19 மற்றும் 20-ம் தேதிகளில் விஸ்வ இந்து பரிசத்தின் மார்க்தர்ஷக் சமிதியின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தாமதமாகவே நடக்கிறது
மத்திய அரசு எடுத்து வரும் சில நடவடிக்கைகள் எங்களை பொறுமையோடு இருக்கச் செய்கிறது. ஆனால் இதற்கு மேலும் பொறுமையோடு காத்திருக்க முடியாது. ஏனெனில், ஏற்கெனவே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பொறுமை காத்துவிட்டோம். அடுத்த 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும். அதற்கு முன்னதாக பிரதமர் மோடியைச் சந்தித்து ராமர் கோயில் தொடர்பாக அழுத்தம் கொடுப்போம். ராமர் கோயில் கட்டும் விஷயத்தில் அனைத்தும் தொடர்ந்து தாமதமாகவே நடக்கிறது என்று அலோக் குமார் குறை கூறினார்.