ஆஹ இப்போதைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்காது? சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் திடீர் மனு
டெல்லி: குமாரசாமி அரசு தாக்கல் செய்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம், இப்போதைக்கு முடிவுக்கு வராது என்று தெரிகிறது. ஏனெனில் கொறடா உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி கர்நாடக காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக, அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர், உச்சநீதிமன்றத்தை அணுகி தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் விரைவில் கேட்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கூடிய விரைவில் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதோடு, அதுவரை அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி சட்டசபைக்கு வர வைக்க கூடாது என்று தெரிவித்திருந்தது.
இதுகுறித்து நேற்று சட்டசபையில் பாயிண்ட் ஆப் ஆர்டர் பிரச்சினையைக் கிளப்பினார் காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா. அரசியல் சாசனம் அட்டவணை 10ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விப் அதிகாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கேட்ட பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இதே கோரிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. விப் உத்தரவு பற்றி, உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று விளக்கம் அளித்தால், அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு விப் உத்தரவை பிறப்பித்து, அவர்களை கட்டாயப்படுத்தி வாக்கெடுப்பில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க முடியும், என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது.