செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் பணியாளர்கள் இறப்பது தமிழகத்தில் தான் அதிகம்.! பகீர் தகவல்
டெல்லி: பாதாள சாக்கடை, மற்றும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் தொழிலார்கள் இறப்பது தமிழ்நாட்டில்தான் அதிகம் என்று நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கழிவு நீர் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது துப்புரவுத் தொழிலாளர்கள் உயிரிழப்பது குறித்தும் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களான அசாதுதீன் ஒவைசி மற்றும் சையத் இம்தியாஸ் ஜலீல் ஆகியோர் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது பேசிய அவர் 1993-ம் ஆண்டு முதல் தற்போது வரை கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் போது, 620 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மிக அதிக அளவாக தமிழகத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உபியில் 71 பேரும், ஹரியானா 51, ராஜஸ்தான் 33, பஞ்சாப் 30, டெல்லி 28, மேற்கு வங்கம் 18, கேரளா 12, உத்தராகண்ட் 9. ஆந்திரம் 8, சத்தீஸ்கர் 4, சண்டிகர் 4, தெலங்கானாவில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புள்ளி விவரங்கள் 15 மாநிலங்களில் எடுக்கப்பட்ட தரவுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டால் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்காக 2013-ல் மத்திய அரசால் தடை மற்றும் மறுவாழ்வு சட்டமும் அமலாக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டத்தை மீறி இப்பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது சில மாநிலங்களில் தொடர்கிறது.
இப்பணியை 13 மாநிலங்களில் 12,700 பேர் தொடர்வதாக கடந்த 2016 மார்ச் மாதம் மத்திய அமைச்சகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது. 2016 -ம் ஆண்டு மத்திய அரசு இதை ஒத்துக் கொண்டு கூறியபோது உ.பி.யில் சுமார் 10,300 பேரும், கர்நாடகாவில் 363 பேரும் தமிழகத்தில் 322 பேரும் இந்த தொழிலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் இந்த 322 தொழிலாளர்களில் 2016-ம் ஆண்டில் 11 பேர் பணியின் போது இறந்ததாக தமிழக அரசின் புள்ளிவிவரம் அப்போது கூறியது. ஆனால் இந்த புள்ளி விவரங்களை சமூக செயற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர். இறப்பு விகிதம் இதைவிட அதிகமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மத்திய மாநில அரசுகள் தங்களிடம் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளவர்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது. தற்காலிக, ஒப்பந்த மற்றும் தனியார் தொழிலாளர்களை கணக்கில் எடுப்பதில்லை என்றும் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் என்றால் கடந்த 2018 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் “1993 முதல் இதுவரை நாடு முழுவதிலும் 323 துப்புரவு தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர்.
இதில் மிக அதிக அளவாக தமிழகத்தில் 144 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் 59 பேரும், உ.பி.யில் 52 பேரும் இறந்துள்ளனர்” என்று தெரிவித்திருந்தது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.