இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு வழங்கியது ரத்தாகுமா? தீர்ப்பை ஒத்தி வைத்த டெல்லி ஹைகோர்ட்
டெல்லி:இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன், சசிகலா தரப்பில் வாதிடப்பட்டதாவது: இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோரது அணி சார்பில் போலி பிரமாணப் பத்திரங்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை தேர்தல் ஆணையம்
இது குறித்து புகார் தெரிவித்த போது, குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்கப் படவில்லை. மேலும், எந்தவித நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்க வில்லை என்று வாதிடப்பட்டது. அதற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரது அணி சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் விசாரணை
இந் நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதுகுறித்து டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
வாதம் நிறைவு
அப்போது அவர் கூறியதாவது:இரட்டை சிலை சின்னம் தொடர்பான வழக்கில், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ளன. தீர்ப்பை நீதிமன்றம் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.
ரத்தாகும் என நம்பிக்கை
வழக்கில் டிடிவி தரப்பு குறுக்கு விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை. எனவே, ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்யும் என்று நம்பிக்கை உள்ளது.
தீர்ப்பை எதிர்பார்க்கிறோம்
கட்சியின் அடிப்படை விதிப்படி பொதுச்செயலாளரை கட்சியின் உறுப்பினர்களே தேர்வு செய்ய வேண்டும். எனவே, உச்ச நீதிமன்றம் தந்துள்ள கெடுவுக்குள் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார்.
விதிகளில் திருத்தம்
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் பாபு முருகவேல் அளித்துள்ள விளக்கம் வருமாறு:கட்சியின் அடிப்படை விதிகளை மாற்றக்கூடாது என்பது ஏற்கக்கூடியது அல்ல. ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் கட்சியை வழி நடத்த விதிகள் திருத்தப்பட்டு உள்ளன. தலைமை தேர்தல் ஆணையமே ஓபிஎஸ் தரப்புக்கு சின்னம் வழங்கி விட்டது என்றார்.