தலைநகரில் தீவிரமடையும் போராட்டம்... டெல்லி போக்குவரத்து ஊழியர்களும் இணைய முடிவு!
புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லி போக்குவரத்து ஊழியர்கள் சங்கமும் இந்த போராட்டத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருவதால் இதனை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு போராடி வருகிறது. ஆனால் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.
நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அரசு, நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடக்க உள்ள நிலையில், டெல்லி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் விவசாயிகள் போராட்டத்தில் இணைய முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி போக்குவரத்து பல்வேறு சங்கங்கள் அரியானா-டெல்லி எல்லையில் உள்ள சிங்கு பகுதிக்கு சென்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள் என தெரிகிறது. டெல்லி போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல இடங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசியல் தலைவர்களும் ஆதரவு காட்டி வருகின்றனர்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அளித்து உள்ளார். இப்படி பல்வேறு விதங்களில் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதால் இந்த போராட்டத்தை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பாடுபட்டு வருகிறது.
டெல்லி சலோ.. கொட்டும் பனி...வாட்டும் குளிர்.. 9-வது நாளாக விவசாயிகள் போராட்டம்- நாளை மீண்டும் பேச்சு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறுகையில், வேளாண் சட்டத்தால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகிறார். இந்த சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும். நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என்று தெரிவித்தனர்.