முதல் நாளே பரபரப்பு.. அயோத்தி விசாரணையிலிருந்து நீதிபதி யுயு லலித் திடீர் விலகல்.. பகீர் காரணம்!
அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யுயு லலித் திடீரென்று விலகி உள்ளார்.
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யுயு லலித் திடீரென்று விலகி உள்ளார்.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்றில் இருந்து விசாரணை செய்ய தொடங்கி உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம்தான் பிரச்சனைக்கு காரணம்.
இந்த சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பகிர்வு குறித்த வழக்குதான் தற்போது நடக்கிறது. இன்று தொடங்கிய இந்த விசாரணை 2019 மார்ச் மாதம் வரை விசாரணை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யுயு லலித் விலகி உள்ளார்.
நீதிபதி யுயு லலித் பரபரப்பு
நீதிபதி யுயு லலித் பாபர் மசூதி தொடர்பான வழக்கில் ஏற்கனவே வக்கீலாக இருந்த போது ஆஜராகி இருக்கிறார். 1994ல் நடந்த வழக்கில் இவர் ஆஜரானார். பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அப்போது உத்தர பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங் சார்பாக இவர் ஆஜரானார். கல்யாண் சிங்கிற்கு எதிரான நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் இவர் ஆஜரானார்.
ராஜீவ் தவான் ஆதாரம்
இந்த நிலையில் இந்த பழைய வழக்கின் விவரத்தை, தற்போது அயோத்தி வழக்கில் மனுதாரர்களில் ஒருவராக இருக்கும் ராஜீவ் தவான் அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணையின் போது அளித்தார். அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளிடம் இந்த விவரத்தை அளித்தார். அதே சமயம் நீதிபதி யுயு லலித் இந்த அமர்வில் நீதிபதியாக இருப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கூறினார்.
ஆலோசனை நடத்தினார்கள்
இதையடுத்து அமர்வில் இருந்து ஐந்து நீதிபதிகளும் இதுகுறித்து விவாதம் செய்ய தொடங்கினார்கள். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ போப்பே , என்வி ரமணா, யுயு லலித், டிஓய் சந்திரசூட் ஆகியோர் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடந்தது.
விலகினார்
இந்த ஆலோசனையை அடுத்து தற்போது அயோத்தி வழக்கை விசாரிக்கும் பெஞ்ச்சிலிருந்து நீதிபதி யுயு லலித் விலகி உள்ளார். நீதிபதி யுயு லலித் தானாக விலகி உள்ளதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். தான் வாதாடியதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றாலும் அவர் விலக முடிவெடுத்துள்ளார். இதனால் தற்போது இந்த அமர்விற்கு புதிய நீதிபதி நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.