யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
Recommended Video
டெல்லி: மதரீதியிலான துவேஷ பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில், உத்தர பிரதேச மாநில முதல்வரும், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்ய நாத், மற்றும் பகுஜன் சமாஜ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் அதிரடி தடை விதித்துள்ளது.
இதன் மூலம், 2வது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இவ்விரு தலைவர்களாலும் பிரச்சாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் மத ரீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்திருந்தது. மாயாவதி தனது பிரச்சாரத்தின்போது, முஸ்லீம்கள் காங்கிரசுக்கு ஓட்டு போடக்கூடாது. பாஜகவை எதிர்ப்பது பகுஜன் சமாஜ் கட்சிதான் என கூறினார். இவ்விரு பேச்சுக்களும் தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இவ்விரு தலைவர்களிடமும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், தலைமை தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
மோடியை திருடர் என்று விமர்சிப்பதா? ராகுல் மீது பாஜக வழக்கு.. உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
இந்த நிலையில்தான், நாளை காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு, அதாவது 2 நாட்களுக்கு மாயாவதி பிரச்சாரம் செய்வதோ, ரோடு ஷோவில் ஈடுபடுவதோ, பிரஸ் மீட் செய்வதோ கூடாது என தேர்தல் ஆணையம் இன்று தடை விதித்து உத்தரவிட்டது.
இதேபோன்ற உத்தரவு யோகி ஆதித்யநாத்துக்கும் பொருந்தும். ஆனால் அவருக்கு 72 மணி நேரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்களுக்கு அவரால் பிரச்சாரம், பிரஸ் மீட் உள்ளிட்ட எந்த விஷயங்களிலும் ஈடுபட முடியாது. இந்த உத்தரவு காரணமாக 18ம் தேதி நடைபெற உள்ள தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இவ்விரு முக்கிய தலைவர்களாலும் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.