நாடாளுமன்றத்தில் முதல் நாளே சூப்பர்.. தமிழின் ஆதிக்கத்தை அழுத்தமாக நிலைநாட்டிய தமிழக எம்பிக்கள்
Recommended Video
டெல்லி: இந்தியை தமிழகத்தில் திணிக்க நடைபெறும் முயற்சிகளுக்கு மத்தியில் தமிழின் ஆதிக்கத்தை நாடாளுமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக நிலை நாட்டியுள்ளார்கள் தமிழ்நாடு எம்பி.க்கள். அதிமுக எம்பியும் கூட தமிழிலேயே பதவியேற்றதை காண முடிந்தது. இதன் மூலம் வரும் நாட்களில் தமிழகத்தின் உரிமைகளையும் இதேபோல அழுத்தம் திருத்தமாக தமிழ்நாட்டு எம்பிக்கள் நிலை நிறுத்த முயல்வார்கள் என்பதற்கான கட்டியமாக தெரிகிறது.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன்காரணமாக பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து அன்றே அவரது தலைமையிலான அமைச்சரர்களும் பதவியேற்றனர்.
ஆனால் தமிழகம் மற்றும் புதுவையில் மட்டும்பாஜக படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகமட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
தமிழ் வாழ்க கோஷங்களுக்கு மத்தியில் ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் என முழங்கிய ஓபிஎஸ் மகன்.. பாராட்டிய பாஜக
தமிழிலேயே உறுதி மொழி
இந்நிலையில் புதிய 17-வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், நேற்று தொடங்கியது. நேற்றும், இன்றும் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 38 எம்பிக்களும் தங்கள் தாய்மொழியான தமிழிலேயே உறுதி மொழி எடுத்து பதவியேற்றனர்.
திட்டமிட்டு தமிழில் பதவியேற்பு
நாடாளுமன்றத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் இன்று அனைவரும் தமிழில் பதவியேற்க வேண்டும் எனமுடிவு செய்தனர். இதனை எம்பிக்கள் சிலர் டுவிட்டரில் வெளிப்படுத்தி இருந்ததையும் காண முடிந்தது.
தமிழின் ஆதிக்கம்
இதன்படி, தமிழக எம்பிக்கள் 38 பேரும் தாய்மொழியான தமிழ்மொழியில் இறைவனின் மீது ஆணையிட்டு எம்பியாக பதவியேற்றதை காணமுடிந்தது. இதனால் இன்று காலை முதலே நாடாளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்ற கோஷம் வலுவாக காணப்பட்டது. தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சி நடந்து வரும் நிலையில், நாடாளுமன்றம் கூடிய முதல் நாளிலேயே தமிழின் ஆதிகத்த்தை தமிழக எம்பிக்கள் அழுத்தமாக நிலை நாட்டி உள்ளனர். பதவியேற்ற அனைவருமே தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க என பலமாக கோஷம் எழுப்பினர்.
திணிக்கப்படும் திட்டங்கள்
இதன் மூலம் வரும் நாட்களில் தமிழகத்தின் உரிமைகளையும் இதேபோல அழுத்தம் திருத்தமாக தமிழ்நாட்டு எம்பிக்கள் நிலை நிறுத்த முயல்வார்கள் என்பதற்கான கட்டியமாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் இந்தி மட்டுமல்ல, ஹைட்ரோ கார்பன், நீட், அணுக்கழிவுகள், நியூட்ரினோ திட்டம், உள்பட தமிழக நலனுக்கு எதிராக திணிக்கப்படும் எந்த திட்டத்தையும் தமிழக எம்பிக்கள் எதிர்ப்பார்கள் என்பதை இந்த பதவியேற்பு விழா எடுத்துக்காட்டியது.