ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு
டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் துவங்கியது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்க ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிதி ஆயோக் கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி ஏழ்மை, வேலைவாய்ப்பின்மையை எதிர்த்து போராட வேண்டிய நேரமிது. ஏற்றுமதியால் மட்டுமே வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். எனவே ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
வரும் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வளர்ச்சியை 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு சவாலானது தான். ஆனால் மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்தால் இந்த இலக்கை நிச்சயம் அடைந்து விடலாம்.
தண்ணீருக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கவே ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றார். 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் விவசாயிகளை சென்றுசேர வேண்டும்.
விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால், இரட்டிப்பு வருமானம் பெறலாம். மேலும் விவசாயிகள் தோட்டகலைத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். 2025-க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பேசினார்