கொரோனாவுக்காக தளர்வு..மருத்துவமனைகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தலாம்.. அரசு அனுமதி!
டெல்லி: மருத்துவமனைகள், மருந்தகங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்துவதற்காக சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.
கணக்கில் வராத கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில் கடந்த 20216-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
அதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் இருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்துவதற்கு அதிரடி தடை விதிக்கப்பட்டது. எந்த ஒரு பில்லுக்கும் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.
அரசின் இந்த அறிவிப்பால் டிஜிட்டல் வங்கி வசதிகள் இல்லாத பல குடும்பங்கள் மருத்துவமனை கட்டணங்களை செலுத்த சிரமப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக கட்டணம் செலுத்த முடியாமல் பலர் அவதியடைந்து வந்தனர்.
தமிழகத்தில் கொரோனா காலி படுக்கைகளை அறிய புதிய இணைய தளம்
இந்த நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் மே 31-ம் தேதி மருத்துவமனைகளில் கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான பில்களுக்கு ரூ. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணத்தை ரொக்கமாக வழங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருத்துவ இல்லங்கள், கொரோனா சிகிச்சை மையங்கள் அல்லது இதே போன்ற பிற மருத்துவ வசதிகளில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்த அனுமதிக்கும் வருமான வரி சட்டத்தில் மாற்றங்களை செய்து அரசு அறிவித்துள்ளது. பணம் செலுத்துபவர்களின் பான் கார்டுகள், ஆதார் அட்டை ஆகிய விவரங்களை பணம் பெறும்போது பெற்றுக் கொள்ளும்படி மருத்துவமனை, இது தொடர்பான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.