ஹேப்பி நியூஸ்.. கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி!
டெல்லி: கீழடியில் மீண்டும் அகழாய்வு நடத்த தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. லோக்சபாவில் இன்று எழுத்துப்பூர்வமாக மகேஷ் சர்மா அளித்த பதிலில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பகுதியில், தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில், 3 ஆண்டுகள் அகழ்வாராச்சி நடைபெற்றது. இதையடுத்து, நான்காம் ஆண்டு இந்த ஆய்வை மேற்கொள்ள தமிழக தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
6 தங்க ஆபரணம் உட்பட 5,820 தொல்பொருள்கள் இதில் கண்டெடுக்கப்பட்டன. அதை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழர்களின் பன்னெடுங்கால கலாச்சாரத்தை அறிய இந்த ஆய்வு உதவியது.
இந்த நிலையில், அடுத்தகட்ட ஆய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்தான, அதிமுக எம்.பி. பரசுராமன் கேள்விக்கு லோக்சபாவில் இன்று மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளித்துள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: 2015-16ல் இந்திய தொல்லியல் துறை கீழடி அகழாய்வுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கியது. 2016-17ல் ரூ.44.50 லட்சம், 2017-18ல் ரூ.23.65 லட்சம் ஒதுக்கப்பட்டது. 2017-18ல் தமிழக தொல்லியல் துறை ரூ.55 லட்சம் ஒதுக்கியது.
கீழடியில், 2018-19ம் ஆண்டுக்கான அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை, தமிழக அரசுக்கு அனுமதி வழங்கிவிட்டது. இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.