டிக் டாக்கால் பிரபலமான ஜிம் மாஸ்டர்.. பட்டபகலில் சுட்டுக் கொலை.. டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் டிக் டாக்கால் பிரபலமான ஜிம் மாஸ்டர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட ஜிம் மாஸ்டரின் பெயளர் மோஹித். இவருக்கு 27 வயதாகிறது. உடலை கட்டமைப்பதில் அதீத ஆர்வமுடையவராம் கொல்லப்பட்ட மோஹித். ஹரியானாவை சேர்ந்த இவர் டெல்லியின் நஜாப்கர் என்ற பகுதியில் ஜிம் ஒன்றை சொந்தமாக நடத்தி வந்துள்ளார்.
அதில் இவரே பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார் . இவர் பிரபல சமூக பொழுது போக்கு ஆப்பான டிக்-டாக்கில் அடிக்கடி உடற்பயிற்சி குறித்த வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இதனால் இவர் டிக் டாக்கில் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமடைந்துள்ளார். உடற்பயிற்சி வீடியோக்கள் மூலம் பிரபலமான இவரை டிக்-டாக் ஆப்பில் சுமார் 5 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். இதுவரை 8 மில்லியன் ஹார்ட்ஸ்களை டிக் டாக்கில் வாங்கியுள்ளார்.
இவ்வாறு பிரபலமடைந்து வரும் மோஹித் வழக்கம்போல் நேற்று ஜிம்மிற்கு சென்றுள்ளார். அப்போது ஜிம்மிற்கு அருகே உள்ள கடை ஒன்றில் தனது நண்பர் ஒருவரை சந்திக்க சென்றுள்ளார்.
நாளை தேர்தல் ரிசல்ட்.. வாக்கு எண்ணும்போது அதிமுக கலவரம் செய்யும்.. வெற்றிவேல் பகீர் குற்றச்சாட்டு
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென அவரை நோக்கி வந்த மூவர், மோஹித்தை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளனர். குண்டுகளால் துளைக்கப்பட்ட மோஹித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுமார் 13 குண்டுகள் மோஹித்தின் உடலை துளைத்தன
கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். அதில் 2 குற்றவாளிகள் ஹெல்மட் அணிந்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டும் ஹெல்மெட் அணியாததால், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் முகம் பதிவாகியுள்ளது. அதனைக் கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த கொலை குறித்து தீவிரமாக விசாரித்து வரும் போலீஸார் மோஹித் பிரபலமாக காரணமான டிக் டாக் ஆப் மூலம் ஏற்பட்ட முன்விரோதமே அவருக்கு எமனானதா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர். ஏனெனில் குற்றப்பிண்ணனி எதுவும் மொஹித்துக்கு இல்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.
தனக்கு பிடிக்காத தனிப்பட்ட சிலரை விமர்சிக்கும் வகையில் மோஹித் சில வீடியோக்களை டிக்டாக்கில் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் அவரை திட்டமிட்டு கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.