தொழில்நுட்ப கோளாறு.. கவுண்டவுன் ஆரம்பிக்கும் நேரத்தில் அறிவித்த இஸ்ரோ.. ஜிசாட் 1 பயணம் ஒத்திவைப்பு
டெல்லி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஜிசாட்-1 செயற்கைக்கோள் ஏவுவது ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்10 ராக்கெட் மூலம், நாளை விண்ணில் ஏவப்பட இருந்தது ஜிசாட் 1 செயற்கைக்கோள்.
2,268 கிலோ எடை கொண்டது, ஜிசாட்-1 செயற்கைக்கோள். நாளை மாலை 5.43 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்படுவதாக இருந்தது. 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் ஜிசாட்-1 செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டு, பூமியில் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை கண்காணிக்க உதவி செய்யும். இயற்கை பேரிடர் போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் அதிநவீன புகைப்படங்களை, இவை எடுத்து அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
விவசாயம், வனம், தாதுக்கள், பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை கண்காணிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும். இந்த நிலையில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக, ஜிசாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவதை ஒத்தி வைத்துள்ளதாக இஸ்ரோ இன்று மாலை அறிவித்துள்ளது.
3.43 மணிக்கு கவுண்டவுன் ஆரம்பிக்க வேண்டிய நிலையில், இந்த அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டது.
Recommended Video
இந்த வருடத்தின், முதலாவது விண்வெளி, ஆய்வு முயற்சி இதுவாகும். ஆனால், அதில் தடை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, எப்போது ஜிசாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்ற தேதி அறிவிக்கப்படவில்லை.