நிர்பயா குற்றவாளிகளுக்கு வாதாடிய வழக்கறிஞர்... ஹத்ராஸ் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆஜராகிறார்!!
டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், ஹத்ராஸ் பாலியல் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார்.
இவரை இந்த வழக்கில் வாதாடுவதற்கு உயர் ஜாதி அமைப்பான அகில பாரதிய ஷத்ரிய மஹாசபா நியமித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மன்வேந்திர சிங்தான் இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார். ஹத்ராஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடுவதற்கும் ஏ.பி.சிங்கை ராஜா மன்வேந்திர சிங்தான் நியமித்து இருக்கிறார்.
இதுகுறித்து பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டு இருக்கும் ராஜா மன்வேந்திர சிங், ''ஹத்ராஸ் வழக்கில் வாதிடுவதற்காக பெரிய பணம் வசூலித்துள்ளோம். உயர் ஜாதி வகுப்பினரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் எஸ்சி/எஸ்டி வகுப்பினர் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராஜ்புட் வகுப்பினரை இது மிகவும் பாதிக்கிறது.
ஹத்ராஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஏ.பி.சிங் வாதிடுவார். இந்த வழக்கில் உண்மையை ஏ.பி.சிங் வெளியே கொண்டு வருவார்'' என்று தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் பாலியல் சம்பவம்... ஆளுநர் மாளிகை நோக்கி...திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி!!
ஹத்ராஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக உயர் ஜாதி வகுப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். சர்வன் சமாஜ் என்ற அமைப்பினர் குற்றம்சட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நீதி கேட்டு தர்ணா செய்து இருந்தனர். அப்போது, அப்பாவிகளை தண்டிக்கக் கூடாது. குற்றவாளிகளை விட்டு விடக் கூடாது என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இவர்களுக்கு ஆதரவு கோரி பஞ்சாயத்தும் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக ஹத்ராஸ் பாஜக எம்எல்ஏ வீடு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தனர்.