எகிறும் டென்ஷன்.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி துவக்கம்.. ஆகஸ்ட் 12 வரை நடக்கும்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி, அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடக்க உள்ளதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என்று நாடாளுமன்றம் வருடந்தோறும் 3 முறை கூடுவது வழக்கம்..
இதில் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது... அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி ஆரம்பமாகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடர்.. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்..!
மொத்தம் 18 அமர்வுகள்
ஆகஸ்டு 12-ந்தேதி இந்த தொடர் முடிவடைகிறது.. இந்த தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது... அதேசமயம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போன்ற பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவது வழக்கம் என்றாலும், இந்த முறை அக்னிபத் திட்டம் சூடுபிடித்துள்ளது.. எனவே, அக்னிபாத் தொடர்பான வாதங்கள் பரபரக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி
இந்நிலையில், நடக்க போகும் இந்த தொடரில் சில முக்கிய நிகழ்வுகளும் அரங்கேற போகின்றன.. முக்கியமாக, ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. இதில், பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தங்களுக்கான ஆதரவை மாநில வாரியாகவும் தலைவர்களை சந்தித்து கோரி வருகின்றனர்.. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் நாடே காத்து கிடக்கிறது.
பதவியேற்பு
எனினும், இதில், வெற்றி பெறுபவர் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 25-ந்தேதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்க போகிறார்.. அதுமாதிரியே, ஆகஸ்டு 6-ந்தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளதால், இதிலும் முக்கிய தலைவர்கள் போட்டியிட போகிறார்கள்.. இதில் வெற்றி பெறுபவர் ஆகஸ்டு 11-ந்தேதி அடுத்த துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொள்வார்.
மழைக்கால கூட்டத்தொடர்
இதற்கிடையே, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகள் துரிதமாகி உள்ள நிலையில், அநேகமாக இந்த வருட இறுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது... புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், இந்த குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.. அந்தவகையில் இப்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் கடைசி கூட்டத்தொடர் இந்த மழைக்கால கூட்டத்தொடராக இருக்கலாம் என்றே தெரிகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற செயலக அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.