பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்? நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து முடிவு!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் இன்று புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி மீண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில், 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
மோடி அமைச்சரவையில் இம்முறை பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமித்ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதேபோல் அர்ஜூன் முண்டா, ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், பிரலகத் ஜோஷி, அரவிந்த் சாவந்த், பிரகலாத் படேல், ஆர்கே சிங் உள்ளிட்டோரும் இம்முறை புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் அசத்தும் 6 பெண் அமைச்சர்கள்.. மோடியின் அமைச்சரவையில் பெண்களுக்கு 10% இடம்!
இதேபோல் மோடி அமைச்சரவையில் 6 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி மற்றும் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் கேபினர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் மற்றும் தேவஸ்ரீ சவுத்ரி ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மோடி அமைச்சரவையில் மொத்தம் 57 அமைச்சர்கள் உள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று மோடி தலைமையில் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்தும் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.