Unnao Rape Case: அந்த ஒரு விபத்து.. மொத்த நாடும் கொதிப்பு.. உச்சநீதிமன்றம் சாட்டை வீச்சு
டெல்லி: அந்த ஒரு விபத்து.. அதுதான் உன்னாவ் பலாத்கார வழக்கை இன்று உச்சநீதிமன்றம் தலையிட்டு, விசாரணைக்கு கெடு கொடுக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் 2017, ஜூன் மாதம் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார், உ.பி.யின், ரேபரேலியில் நேற்று முன்தினம் 'விபத்தில்' சிக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவருடன் காரில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உள்பட 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக தலைமை இன்று அறிவித்தது.
இந்த நிலையில், உன்னாவ் கூட்டு பலாத்கார வழக்கு தொடர்பான, 5 வழக்குகளை உத்தர பிரதேசத்திலிருந்து, டெல்லிக்கு மாற்றியுள்ளது உச்சநீதிமன்றம். பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்ல முயன்ற வழக்கின் விசாரணையை அதிகபட்சமாக 7 நாட்களுக்குள் சிபிஐ விசாரித்து முடிக்க வேண்டும்.
அப்போதே அவர் துப்பாக்கி லைசன்ஸ் கேட்டார்.. மறுத்த யோகி அரசு.. உன்னாவ் வழக்கில் வெளியான ரகசியம்!
இந்த வழக்குகளை 45 நாள் காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இத்தனை அதிரடிகளும் இன்று உச்சநீதிமன்றத்தால் திடீரென முன்வைக்கப்பட காரணம், நேற்று முன்தினம் நடந்த அந்த விபத்துதான். பலாத்காரம் செய்துவிட்டு அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் விபத்து என்ற போர்வையில் கொலையும் செய்யலாம் என்று நினைப்போரை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் இந்த கோபத்திற்கு காரணம்.