பாம்பன் பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்...ரூ.250 கோடி ஒதுக்கீடு
டெல்லி: ராமேஸ்வரத்துக்கு செல்லும் பாம்பன் ரெயில் பாலத்துக்கு பதிலாக ரூ.250 கோடியில் புதிய பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
1914-ம் ஆண்டு பாம்பன் ரெயில் பாலம் கட்டப்பட்டது. 104 ஆண்டுகள் பழமையான இப்பாலம், 2006-ம் ஆண்டு அகல பாதையாக மாற்றப்பட்டது. ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற வரலாற்று பொக்கிஷம் என்றால் மிகையாகாது.
புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலத்தில் விரிசல்
சமீபத்தில், பாம்பன் தூக்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, ராமேஸ்வரத்துக்கு செல்ல வேண்டிய ரெயில்கள், மண்டபத்துடன் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில், பாம்பன் பாலத்துக்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
4-5 ஆண்டுகள் ஆகும்
தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. இரட்டை ரெயில் பாதையாக இப்பாலம் அமைய உள்ளது. இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த புதிய பாலம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. பாலத்தை கட்டி முடிக்க 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தொழில்நுட்பம்
கடல் நீரால் அரிப்பு ஏற்படாதவகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ஸ்லீப்பர் கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படும். இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும். தற்போதைய பாலத்தை விட, 3 மீட்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்படுகிறது. அதனால் ஒரே நேரத்தில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும்.
பழைய பாலம்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து பாக் ஜலசந்தி பகுதிக்கு கப்பல்கள் சென்று வருவதற்காக கடந்த 1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் பாம்பனில் சுமார் 80 அடி அகலம், 300 அடி நீளத்தில் கால்வாய் தோண்டப்பட்டது. பின்னர் அந்த கால்வாயில் சிறிய அளவிலான சரக்கு கப்பல்கள் சென்று வரத்தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.