ராஜஸ்தான் சட்டமன்ற கணக்கு என்ன சொல்கிறது... ஆட்சி பாஜக கைக்கு செல்கிறதா?
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நீடிக்குமா, நீடிக்காதா என்பதற்கான கிளைமேக்ஸ் இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் என்றே அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 109 எம்.எல்.ஏ., களின் பலம் இருப்பதாக அந்தக் கட்சி கூறி வருகிறது. ஆனால், துணை முதல்வர் சச்சின் பைலட் தனக்கு 30 எம்.எல்.ஏ.க்களின் பலம் இருப்பதாக கூறி வருகிறார். கணக்குதான் இவர்களது ஆட்சியை நிர்ணயிக்கப் போகிறது.
ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க 101 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. 200 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அவையில் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்களின் (துணை முதல்வர் சச்சின் பைலட் குழுவையும் சேர்த்து) ஆதரவு இருக்கிறது. பாஜகவுக்கு 72 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சிக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் , இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், பாரதிய பழங்குடியினர் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள், ராஷ்டிரிய லோக்தளம் கட்சிக்கு 1 எம்.எல்.ஏ.வும், சுயேட்சைகள் 13 பேரும் உள்ளனர்.
கவிழும் ராஜஸ்தான் அசோக் கெலாட் தலைமையிலான காங். அரசு- சச்சின் பைலட்டுடன் பாஜக மும்முர பேச்சுவார்த்தை
தீராத சர்ச்சை
இந்த மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்க 101 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும். அந்த வகையில் காங்கிரசுக்கு 2018 சட்டமன்ற தேர்தலில் 107 இடங்கள் கிடைத்தது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெஹ்லட் முதல்வராகவும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பொறுப்பேற்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்தே அதிகாரப்போட்டி இருந்து வருகிறது. முதல்வர் ஆக வேண்டும் என்பது பைலட்டின் விருப்பம். ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைமை மூத்தவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று தீர்மானித்து அசோக் கெஹ்லட்டிற்கு வாய்ப்பு கொடுத்தது.
பாஜக சதியா?
இந்த நிலையில், இருவருக்கும் இடையே நடந்து வந்த பனிப் போர் சனிக்கிழமை வெளிச்சத்துக்கு வந்தது. ஆட்சியை கவிழ்க்க பாஜக தனது கட்சி எம்.எல்.ஏ.களுக்கு ரூ. 2000 கோடி அளவிற்கு பேரம் பேசுவதாக அசோக் கெஹ்லட் அதிரடியாக குற்றம்சாட்டினார். இதையடுத்து டெல்லிக்கு 30 எம்.எல்.ஏ.க்களுடன் சென்ற சச்சின் பைலட் அங்கேயே தங்கி விட்டார். காங்கிரஸ் சார்பில் ஜெய்ப்பூரில் நடக்கும் எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்து விட்டார். பைலட்டை சமாதானப்படுத்த மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பைலட்டை சோனியா மற்றும் ராகுல் காந்தி இதுவரை சந்திக்கவில்லை. அவரை சந்திக்கவும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர்களை சந்திக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பைலட் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் காங்கிரசில் இருந்து பாஜகவுக்கு தாவிய ஜோதிர்ராதித்திய சிந்தியாவை டெல்லியில் பைலட் நேற்று சந்தித்தார்.
நட்டாவுடன் சந்திப்பு
இன்று பாஜக தலைவர் ஜே.பி நட்டாவை பைலட் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே தங்களுக்கு 109 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்கிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
பைலட் கையில் முடிவு
ஆனால், தற்போது பைலட் பிடியில் 30 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழக்கும். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும். நிரூபிக்க முடியாத சூழல் உருவாகும்போது காங்கிரஸ் ஆட்சியை இழக்கும். இதையடுத்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரும். பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கும். பைலட் ஆதரவு கிடைக்கும்போது பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும். சுயேட்சைகளின் ஆதரவும் சூழலைப் பொருத்து மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. தற்போது இவர்களது ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாக தெரியவில்லை.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும். ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் விரிசல் விழுந்தது விழுந்ததுதான். இனி இணைவது கடினம். இன்னும் இரண்டு நாட்களுக்குள் ராஜஸ்தான் யார் கைக்கு செல்கிறது என்று தெரிந்துவிடும்.
காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைய காங்கிரஸ் தலைமையும் தவறிவிட்டது. இந்த இடைவெளிகளை, காங்கிரஸ் தலைமையின் அமைதியை அறுவடை செய்ய பாஜகவும் தயாராக இருக்கிறது.