குடும்ப பின்னணி.. புதிய இந்தியா.. தோனிக்கு மோடி எழுதிய கடிதம்.. இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா?
டெல்லி: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிக்கு பிரதமர் மோடி எழுதி இருக்கும் கடிதம் இணையம் முழுக்க பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் வீரர்களின் ஓய்வுக்கு எல்லாம் பொதுவாக பிரதமர் மோடி கடிதம் எழுத மாட்டார். ஆனால் தோனிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார் என்றால்.. அதில் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தானே செய்யும்? மோடியின் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருக்கும் சில விஷயங்களை, குறியீடுகளை இங்கே விளக்கி இருக்கிறோம்!
Recommended Video
இந்திய அணியின் தூணாக இருந்த தல தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மிகப்பெரிய இறுதி போட்டி நடத்தப்பட்டு பெரிய விழாவுடன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிக அமைதியாக, தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் எளிமையாக தோனி ஓய்வை அறிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து இரண்டு விதமான கேள்விகள் எழுந்தது. ஒன்று, அவர் சிஎஸ்கேவில் தொடர்ந்து விளையாடுவாரா? என்பது. இதற்கு பதில்..எஸ் அவர் கண்டிப்பாக விளையாடுவார்.
அரசியல் எப்படி
இதில் இரண்டாவது கேள்வி.. தோனி அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? என்பது. இதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. தோனியை பாஜக தங்கள் கட்சிக்குள் இழுக்க முயன்று வருவதாக கூறுகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா தோனி குறித்து செய்த டிவிட்டும் கூட ஒரு அரசியல் அழைப்புதான் என்று செய்திகள் உலாவியது. இந்த நிலையில்தான் பிரதமர் மோடி, நேற்று தோனியை வாழ்த்தி கடிதம் ஒன்றை எழுதினார்.
ஏன் முக்கியம்
தோனியின் ஓய்விற்கு மோடி கடிதம் எழுதினார் என்பதே ஒரு வகையில் மிக முக்கியமான விஷயம் ஆகும். ஏனென்றால் மோடியை வைத்து ஜார்கண்டில் அரசியல் காய்களை நகர்த்த பாஜக திட்டமிட்டு வருவதாக பல மாதங்களாக பேச்சுக்கள் இருக்கிறது. தமிழகத்தில், பாஜகவை பிரபலப்படுத்த அந்த கட்சிக்கு நம்பிக்கையான முகம் ஒன்று தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பிரதமர் மோடி தொடங்கி பாஜக தலைவர்கள் பலர் வரிசையாக தோனிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சொன்னது என்ன
பிரதமர் மோடி தனது கடிதத்தின் முதல் வரியிலேயே சிக்ஸர் அடித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்., டியர் மஹிந்திரா என்றதான தோனியை மோடி அழைத்து இருக்கிறார். இதுவரை பிரபலங்கள் யாரும் தோனியை இப்படி அழைத்தது இல்லை. ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து நீங்கள் வந்து, இவ்வளவு பெரிய உச்சத்தை அடைந்து உள்ளீர்கள். இந்தியாவில் வெற்றிபெற குடும்ப பின்னணி தேவை இல்லை என்பதை நீங்கள் நிரூபித்து உள்ளீர்கள், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
தோனியின் பின்னணி குறித்து மோடி இந்த கடிதத்தில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டு உள்ளார். மோடி, எங்கே சென்றாலும் தன்னுடைய பின்னணி குறித்து பேசுவார். நான் டீ கடை நடத்தினேன் என்பதை மிகவும் பெருமையாக சொல்வார். ஒரு டீ கடைக்காரர் இந்தியாவில் பிரதமராக முடியும் என்ற கனவை மக்கள் நிறைவேற்றி உள்ளனர் என்று மோடி பல மேடைகளில் பேசி இருக்கிறார். தற்போது தோனியின் பின்னணி குறித்து பேசி..தன்னை அவருடன் ''கனெக்ட்'' செய்ய முயல்கிறார் என்று கூறுகிறார்.
நாம ஒன்றுதான்
நீங்களும் நானும் ஒன்றுதான். இந்தியாவில் சாதிக்க இனியும் குடும்ப பின்னணி தேவை இல்லை என்று மறைமுகமாக மோடி குறிப்பிட்டுள்ளார். இதில் மோடி மறைமுகமாக ''சில குடும்பத்தை'' தாக்கி உள்ளார் என்றும் நெட்டின்சன்கள் கூறுகிறார்கள். அதோடு இன்னொரு பக்கம் தோனிக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு சேர்த்து நைசாக புதிய இந்தியா குறித்தும் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
புதிய இந்தியா எப்படி
இளைஞர்கள் நினைப்பதை சாதிக்க புதிய இந்தியா வழிவகுக்கும். நீங்கள் புதிய இந்தியாவிற்கான எடுத்துக்காட்டு. புதிய இந்தியாவின் ஆன்மாவை பறைசாற்றும் முகமாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த தலைமுறை ரிஸ்க் எடுக்க தயங்குவது இல்லை. புதிய இந்தியாவிற்கு கீழ் இளைஞர்களின் எழுச்சி சாத்தியம் ஆகியுள்ளது . அதற்கு நீங்கள் உதாரணமாக மாறியுள்ளீர்கள் என்று மோடி, தோனியை குறித்து கூறியுள்ளார்.
ஒற்றுமை
முடிந்த அளவு தோனியை, புதிய இந்தியாவின் புரொடெக்ட் போல பாஜக காட்ட நினைப்பதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள். தோனிக்கு என்று அரசியல் அடையாளம் இல்லை. அவரை தங்கள் பக்கம் சுவீகரித்துக் கொள்ள பாஜக நினைக்கிறது. இதற்கான முன்னோட்டம்தான் மோடியின் கடிதம் என்றும் கூறுகிறார்கள். ஜார்கண்ட் தேர்தல் சமயத்திலேயே தோனியிடம் பாஜக ஆதரவு கேட்டதாக செய்திகள் வந்தது. லோக்சபா தேர்தலுக்கு முன் அமித் ஷாவை தோனி சந்தித்ததும் நிகழ்ந்தது.
அழுத்தம் காரணம்
அதோடு தோனியின் ஓய்வுக்கு கூட பாஜகவின் அழுத்தம்தான் காரணம் என்று கூறப்பட்டது. இப்படி இருக்க மோடி தொடங்கி அமித் ஷா வரை எல்லோரும் தோனியை ஓய்வை குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதிலும் மோடி, நியூ இந்தியா, குடும்ப பின்னணி, ஏழ்மை என்று தனது பிரச்சார ஸ்டைலில் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவும் தோனிக்கு சாயம் பூசும் யுக்திதான் என்று கூறுகிறார்கள். அரசியல் குறித்த வதந்தி எதற்கும் தோனியும் இன்னும் பதில் சொல்லவில்லை.
காங்கிரஸ் ஏன் மௌனம்
மொத்தத்தில் பாஜகவிற்கு நெருக்கமாக தோனியை காட்ட, பாஜக ஆதரவாளர்கள் முயன்று இருக்கிறார்கள். மோடியின் கடிதமும் அதை கொஞ்சம் உறுதிப்படுத்தி உள்ளது . தோனியின் ஓய்வை பாஜக தலைவர்கள் மாறி மாறி வாழ்த்தி பேசி வரும் நிலையில் ஏனோ காங்கிரஸ் தரப்பு இதில் மௌனம் காப்பதும், இந்த சந்தேகத்தை அதிகரித்துள்ளது. தோனி பாஜக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது என்று தெரிந்தே காங்கிரஸ் மௌனம் காக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
இரண்டு விஷயம்
தோனிக்கு மோடி எழுதி இருக்கும் கடிதம் இதனால்தான் கவனம் ஈர்த்து இருக்கிறது. இந்த கடிதத்தை ஒரு லெஜண்ட் வீரருக்கு அந்நாட்டு பிரதமர் சொல்லும் வாழ்த்து கடிதம் என்று கடந்து சென்று விடலாம். அல்லது இது ஒரு அரசியல் அழைப்பு என்றும் எடுத்துக்கொள்ளலாம். வெறும் வாழ்த்தா.. அரசியல் அழைப்பா என்பது தோனியின் முடிவை பொறுத்தே இருக்கிறது. தோனி என்ன முடிவு எடுப்பார் என்பது அவரின் கடைசி பால் சிக்ஸர் போல... கடைசி நேரத்தில்தான் தெரிய வரும்!