வேளாண் மசோதா... பாஜகவுக்கு ஷாக் கொடுத்து பல்டி அடித்த அகாலிதளம்... பரபர பஞ்சாப் அரசியல்
டெல்லி: பஞ்சாப் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வேளாண் மசோதாவுக்கு எதிராக புயலை கிளப்பியுள்ளனர். மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து லோக் சபா மற்றும் ராஜ்ய சபாவில் ஷிரோமணி அகாலிதளம், காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் வாக்களித்துள்ளன.
பாஜக கூட்டணியில் இருந்த மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் பாதல் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஷிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மனைவிதான் ஹரசிம்ரத். பாஜகவுடன் ஷிரோமணி அகாலிதளம் கட்சி கூட்டணியில் இருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள்- அகாலி தளம் மோதல் ஏன்?
ஹர்சிம்ரத் பாதர்
இந்த மசோதாவை நிறைவேற்றினால் கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயாராக இருக்கிறோம் என்று ஷிரோமணி அகாலிதளம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதேபோல் அந்தக் கட்சியின் மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் பாதர் நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்ததை பிரதமருக்கு அனுப்பி இருக்கிறார்.
விவசாயிகள் எதிர்ப்பு
பாஜக இந்த மசோதா தொடர்பாக தங்களிடம் ஆலோசனை பெறவில்லை. கலந்துரையாடவில்லை என்று அகாலிதளம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இருக்கும் விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் மூன்று மசோதாக்களை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதையடுத்து இந்த மூன்று மசோதாக்களை எதிர்த்து வாக்களிக்க ஷிரோமணி அகாலிதளம் முடிவு செய்தது.
மசோதாக்கள் விவரம்
மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020 ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
திடீர் பல்டி
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இந்த மசோதாக்களை ஷிரோமணி அகாலிதளம் எதிர்க்கவில்லை. இதற்கிடையே மத்திய விவசாயிகள் துறை அமைச்சர் நரேந்தர் சிங் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தார். அதில், குறைந்தபட்ச விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவித்து இருந்தார். பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தான் விவசாயிகளை தவறாக வழி நடத்திச் செல்கிறார் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது திடீரென ஷிரோமணி அகாலிதளம் தனது நிலையை மாற்றிக் கொண்டது. இதற்குக் காரணம் அந்த மாநிலத்தில் எழுந்து இருக்கும் விவசாயிகளின் எதிர்ப்பு. தற்போது காங்கிரசின் குரலுடன் இணைந்து ஷிரோமணி அகாலிதளம் பேசி வருகிறது.
வாக்குகள்
பஞ்சாப் மாநிலம் விவசாய பூமி மாநிலம். அதிக அளவில் விவசாயிகள் இருக்கின்றனர். இவர்களது வாக்குகள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. இதையடுத்தே சமீபத்தில் குரல் கொடுத்து இருந்த அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஒவ்வொரு விவசாயியும் அகாலி, ஒவ்வொரு அகாலியும் விவசாயி என்று தெரிவித்து இருந்தார்.
தேர்தலில் தோல்வி
அகாலிதளம் கட்சி நூறு ஆண்டுகள் பழமையானது. கடந்த 2017 தேர்தலில் 117 இடங்களில் வெறும் 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. 2007க்கு முன்பு வெற்றி பெற்று இருந்த அகாலிதளம் கட்சியால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. 2017ல் தோல்வியை தழுவியது. அகாலிதளம், பாஜக இரண்டும் வெறும் 15% இடங்களையே கைப்பற்றி இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி 1957க்குப் பின்னர் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருந்தது.
கமிஷன்
தற்போது அந்த மாநிலத்தில் வாழ்வா சாவா என்ற நிலைக்கு அகாலிதளம் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்தபட்ச விலை கிடைக்காதோ என்று விவசாயிகள் அச்சமடைந்தனர். அதேசமயம் கமிஷன் ஏஜெண்ட்டுகள் தங்களுக்கு கமிஷன் கிடைக்காதோ என்று எண்ணினார்.
28,000 ஏஜென்ட்கள்
பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்து இருக்கும் தகவலின்படி அந்த மாநிலத்தில் 12 லட்சம் விவசாயிகள் உள்ளனர். 28,000 பதிவு செய்த கமிஷன் ஏஜென்ட்கள் உள்ளனர். ஆதலால் இந்த மாநிலத்திற்கு இந்த மசோதாக்கள் முக்கிய இருக்கின்றன.
ராபி கொள்முதல்
பஞ்சாப் மாநிலத்தில் இருந்துதான் அதிகளவிலான அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்கிறது. கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் மொத்தம் கொள்முதல் செய்யப்பட்ட 341.3 லட்சம் மெட்ரிக் டன் ராபி பயிர்களில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மட்டும் 129.1 மெட்ரிக் டன் பயிர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. 2018-19 ஆம் ஆண்டில் நாடு முழுவதிலும் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 443.3 லட்சம் மெட்ரிக் டன் அரிசியில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மட்டும் 113.3 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கமிஷன் இழப்பு
தற்போது கமிஷனர்களின் கவலையே மண்டியில் இருந்து இனி இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யாது. இதனால் இவர்கள் தங்களது கமிஷனை இழப்பார்கள் என்று கவலையை தெரிவித்துள்ளனர். இதன்படி பஞ்சாப் மாநிலம் 6% கமிஷனை இழக்கிறது. தற்போதைய புதிய சட்டத்தின்படி விவசாயிகள் தாங்களாகவே முன் வந்து நேரடி சந்தையில் தங்களது விலை பொருட்களை விற்கலாம் என்பதால், கமிஷன் ஏஜென்ட்கள் தங்களது கமிஷனை இழக்கின்றனர். இதனால் எதிர்ப்பு வலுத்துள்ளது. இதை நம்பி பஞ்சாபில் ஏராளமானவர்கள் இருக்கின்றனர்.
நகர்ப்புறம்
இந்த புதிய சட்டத்தால் வாக்குகளை இழக்கப் போவது பாஜகவும்தான். பஞ்சாப் மாநிலத்தின் நகர்ப்புறங்களில் இந்தக் கட்சிக்கு அதிகளவில் வாக்குகள் உள்ளன. தற்போதைய இந்த புதிய சட்டங்களால் இனி பாஜக வாக்குகளை இழக்கும் நிலை ஏற்படும். பொதுவாக கமிஷன் ஏஜெண்டுகளின் வாக்குகள் பாஜகவுக்குத்தான் சென்று சேரும்.
மோசடி
மோடி அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று மசோதாக்கள் விவசாயிகள் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார். விவசாயிகள் இனி குறைந்தபட்ச ஆதார விலையை பெற முடியாது என்பதோடு, அவா்களின் விவசாய நிலங்களும் முதலாளிகளுக்கு விற்கும் நிலை ஏற்படும். இது மோடியின் விவசாயிகளுக்கு எதிரான இன்னொரு சதி‘ என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.