ரியல் ஹீரோக்கள் இவங்கதான்.. மத்தவங்க ஓரம் கட்டுங்க!
டெல்லி: 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உண்மையான ஹீரோக்களை யாரும் புகழ்ந்து பேசுவது போல தெரியவில்லை. அவர்கள் படு அடக்கமாக அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தேர்தலின் உண்மையான ஹீரோக்கள் யார் என்றால் அது தெலுங்கானாவின் கே.சந்திரசேகர ராவ் மற்றும் மிசோரமின் சோரம்தங்கா ஆகியோரைத்தான் சொல்ல வேண்டும்.
இருவரும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் ஒரு சேர ஓட ஓட விரட்டியடித்துள்ளனர். இரு கட்சிகளையும் அடித்து நொறுக்கி அள்ளிப் போட்டு முடக்கி விட்டனர். இதுதான் உண்மையான வெற்றி என்று கூற வேண்டும்.
சுருங்கிப் போன பாஜக
தெலுங்கானாவிலும், மிசோரமிலும் பாஜகவுக்கு தலா ஒரு இடம் கிடைத்துள்ளது. இதில் மிசோரமில் முதல் முறையாக பாஜக வென்றுள்ளது. தெலுங்கானாாவில் கடந்த முறை பெற்ற 5 தொகுதிகளிலிருந்து இறங்கி ஒரு தொகுதியாக சுருங்கி விட்டது.
சொல்லி வைத்து அடி
தெலுங்கானாவைப் பொறுத்தவரை சொல்லி வைத்து அடித்துள்ளார் கேசிஆர். அவருக்கு இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை சந்திரபாபு நாயுடுதான் முதல் எதிரி. நாயுடுவோ, காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். ஆனால் கேசிஆர் அசரவில்லை.
சத்தமின்றி யுத்தம்
சத்தம் போடாமல் திட்டமிட்டு கச்சிதமாக வெற்றியை ஈட்டியுள்ளார்.
அதுவும் சாதாரண வெற்றி இல்லை. தெலுங்கானா மாநிலம் உதயமான பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை அவரது கட்சி ஈட்டியுள்ளது.
ஒரு சேர வீழ்ச்சி
காங்கிரஸையும், தெலுங்கு தேசத்தையும், பாஜகவையும் ஒரே சேர அவர் வீழ்த்தியுள்ளார். இது மிகப் பெரிய சாதனையாகும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது சட்டிஸ்கரில் பெற்றதுதான் பெரிய வெற்றி. மற்றபடி ராஜஸ்தான், ம.பியை பெரிய வெற்றியாக கருத முடியாது.
புரட்சித் தலைவர் சோரம்தங்கா
மறுபக்கம் மிசோரமில் முன்னாள் போராளியான சோரம்தங்கா கலக்கி விட்டார். அவருக்கு வயது 84 ஆகிறது. மிஸோ தேசிய கூட்டணி ஒரு காலத்தில் தனி நாடு கேட்டு போராடி வந்த போராளிக் குழுவாகும். அதன் தலைவராக இருந்த லால்டெங்காவின் செயலாளராக இருந்தவர்தான் சோரம்தங்கா .
முன்னாள் போராளி
காடுகளிலும், வங்கதேசத்திலும் பதுங்கி வாழ்ந்து இந்திய ராணுவத்திற்கு எதிராக போராடி வந்தவர் சோரம்தங்கா . பின்னர் லால்டெங்கா போராளி வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அரசியலுக்குப் புகுந்தபோது மிஸோ தேசிய கூட்டணியை கட்சியாக மாற்றினார். அதன் துணைத் தலைவராக
மாறினார் சோரம்தங்கா .
அயராமல் உழைப்பு
மிசோரம் மாநிலத்தில் இருமுறை முதல்வராக இருந்தவர் சோரம்தங்கா . கடந்த 2 தேர்தல்களாக இவரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் தோல்வியுற்றார். இம்முறை காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ளார்.
இவர்கள்தான் நாயகர்கள்
மிசோரமில் காங்கிரஸ் கட்சி மீது மக்களுக்கு நிலவி வரும் கடும் அதிருப்தியை சரியாக பயன்படுத்தி வீழ்த்தியுள்ளார் சோரம்தங்கா . ஆக மொத்தத்தில் தெலுங்கானாவும், மிசோரமும், இந்தியாவின் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ், பாஜகவை துரத்தியடித்துள்ளன. எனவே இந்த சாதனையைச் செய்த கேசிஆரும், சோரம்தங்காவும்தான் உண்மையான ஹீரோக்கள் என்பதில் சந்தேகம் தேவையில்லை.