கார்ப்பரேட் வரிக் குறைப்பு.. இது சாதாரண சம்பவம் அல்ல.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.. மோடி சபாஷ்!
Recommended Video
டெல்லி: கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை வரலாற்று சிறப்பு வாய்ந்தது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உலகெங்கும் தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு தொழில் அதிபர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் 15 % மட்டும் வரியாகச் செலுத்தினால் போதும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சூப்பர் சலுகைகள்
ஜூலை 05, 2019-க்கு முன், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் நிறுவனங்கள், தங்கள் பங்குகளை, அந்தந்த நிறுவனங்களே பை பேக் செய்து கொள்ள அறிவித்து இருந்தவர்கள், வரி செலுத்த வேண்டி இருந்தது. அதற்கும் இப்போது முழு விலக்கு அளித்து வரி வசூலிக்கப் படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வெளிநாட்டு ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ஈட்டும் மூல தன ஆதாய வரிக்கு, கூடுதல் சர் சார்ஜ் (Higher Sur charge)விதிக்கப்படாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
இப்படி தொழில்துறைக்கு சாதகமாக பல்வேறு அறிவிப்புகள் கடந்த சில வாரங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இந்த அறிவிப்புகள் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கார்ப்பரேட் வரி குறைப்பு என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை என கூறியுள்ளார்
|
முதலீடு அதிகரிக்கும்
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உலகெங்கும் தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும். தனியார் துறையில் போட்டித்தன்மை மேம்படும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இதன் விளைவாக 130 கோடி இந்தியர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
|
5 டிரில்லியன் டாலர்
பிரதமர் மோடி தனது மற்றொரு பதிவில், "இந்தியாவை வணிகம் செய்வதற்கான சிறந்த இடமாக மாற்றுவதற்கும், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கும் மற்றும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்குமான எந்த ஒரு படிக்கட்டுகளை மத்திய அரசு விட்டுவைக்கவில்லை என்பது கடந்த சில வார அறிவிப்புகள் (பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள்) மூலம் தெளிவாகி உள்ளது" என கூறியுள்ளார். இதனிடையே கார்ப்பரேட் வரி சலுகை அறிவிப்பால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக சென்செக்ஸ் 2000 புள்ளிகளை கடந்து உயர்ந்து இன்று வணிகம் ஆகியது.