டெல்லி வன்முறை வழக்கில் 3 மாணவர்களுக்கு ஜாமீனை ரத்து செய்ய முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: டெல்லி வன்முறை வழக்கு தொடர்பாக 3 மாணவர்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. அதேநேரம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (unlawful activities prevention act/UAPA) தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் கூறிய கருத்துக்கள், பிற வழக்குகளில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதுதொடர்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களான நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா மற்றும் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மூவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மூவருக்கும் கடந்த செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்குள் அவர்களை விடுதலை செய்ய காலக்கெடு நிர்ணயித்தது.
ஆனால் இரு தினங்களாகியும் நேற்றுவரை மூவரும் விடுதலை செய்யப்படவில்லை. காவல்துறை தரப்பில் கடைசி நேரத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி முன்பு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாணவர்களின் அடையாள சான்றுகளை முழுமையாக திரட்ட முடியவில்லை. எனவே அவர்களை இப்போது விடுதலை செய்யக் கூடாது என்று கூறப்பட்டது.
இதுபோன்ற காரணங்களை ஏற்க முடியாது என கண்டனம் தெரிவித்த நீதிபதி மாலை 5 மணிக்குள் மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களை பிணையை வழங்கிய பின் ஒரு நிமிடம் கூட சிறையில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் கருத்தையும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து மாலையில் மூன்று மாணவர்களும் திகார் சிறையிலிருந்து வெளியாகினர்.
ஆனால், மாணவர்கள் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் காவல் துறை வழக்கு தொடர்ந்தது.
போராட்டம் நடத்துவது பயங்கரவாதம் இல்லை.. சிஏஏ போராட்டத்தில் கைதானவர்களுக்கு ஜாமீன்.. டெல்லி ஐகோர்ட்
இன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின், இந்த காலகட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை பிறப்பிப்பது தேவையற்றது என்று உச்ச நீதிமன்றம் கருதுகிறது. எனவே மாணவர்களை ஜாமீனில் விடுதலை செய்ததற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஜூன் 15ம்தேதி மாணவர்களை ஜாமினில் விடுதலை செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டது பற்றி ஒரு சில கருத்துக்களை அப்போது உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
போராட்டம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை அரசு இல்லாமல் செய்து விட்ட.து இதுபோன்ற மனநிலை உருவாகுமானால் ஜனநாயகத்திற்கு அது கருப்பு நாளாக அமைந்து விடும் என்று உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது .
இதை உச்ச நீதிமன்றம் இன்று தனது உத்தரவின் போது சுட்டிக்காட்டியது. வெறும் 100 பக்கம் கொண்ட ஒரு உத்தரவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் பற்றி டெல்லி உயர்நீதிமன்றம் அதிக அளவு கருத்து தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது . ஒட்டுமொத்த நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டம் இதுவாகும் .எனவே டெல்லி உயர் நீதிமன்றம் கூறிய இந்தக் கருத்துக்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் எந்த ஒரு மனுதாரரும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு ஜூலை 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.