'கண்ணா லட்டு தின்ன ஆசையா'.. வருமான வரியை குறைக்க அரசின் குழு பரிந்துரைகள்.. முழு விவரம்
டெல்லி: ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு, வருமான வரி விகிதத்தை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என அரசின் நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்திகளின் படி, நேரடி வரி விதிப்பு முறை தொடர்பான ஆய்வுக்குழு, ரூ. 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரியை 30 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
தற்போது உள்ள வருமான வரி விதிப்பின்படி, 2.5லட்சம் முதல் 5லட்சம் வரை உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இரண்டாவது நிலையாக ரூ.5லட்சம் முதல் 10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவீதமும், 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
பகீர்.. இரவோடு இரவாக ஏவுகணைகளை சோதனை செய்த பாக்.. அதிர்ச்சி வீடியோ.. என்ன செய்ய போகிறது?
5 அடுக்கு பரிந்துரை
இந்நிலையில் வரிவிதிப்பு குழுவின் அளித்துள்ள பரிந்துரையில், 5 சதவீதம், 10 சதவீதம், 20 சதவீதம், 30 சதவீதம், 35 சதவீதம் என்று ஐந்து நிலைகளில் வருமான வரி விதிக்க பரிந்துரைத்துள்ளது.
20 லட்சம் வரை 20 சதவீதம் வரி
மத்திய அரசு அண்மையில் 5லட்சம் வரை வருமான வரி விலக்கு அளித்து உத்தரவிட்டது. இதன்படி வரிகழிவுகள் மூலம் அவர்களுக்கு விதிக்கப்படும் 5 சதவீத வரி தள்ளுபடியாகிவிடும். அடுத்ததாக 5 முதல் 10 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 10 சதவீதமாகவும் (தற்போது 20 சதவீதம்), 10 முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் (தற்போது 30 சதவீதம்) ஆகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2 கோடிக்கு மேல் 35 சதவீதம்
இதேபோல் 20 லட்சம் முதல் 2 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் ஆகவும், 2கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 35 சதவீதமாகவும் வரி விதிக்க பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரைகளால் மத்திய அரசு ஏற்றால், 10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களை இரண்டு அலகுகளாக பிரித்து வரி விதிப்பதன் மூலம் 2 கோடி ரூபாய்க்குள் ஈட்டுபவர்களுக்கு ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் மிச்சமாக வாய்ப்பு உள்ளது. இதேபோல் 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு ஆண்டுக்கு 37 ஆயிரத்து 500 ரூபாய் மிச்சமாக வாய்ப்பு உள்ளது. தற்போது 2 கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு கூடுதல் வரிகள் மூலம் 42 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது.
மக்கள் தாராளமாக செலவு
இந்த பரிந்துரைகளை அமல்படுத்தும்போது, நேரடியாக 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருமான வரி வருவாய் குறைந்துவிடும் என்பதால் அரசு இததை அமல்படுத்துமா என்பது சந்தேகம் என்கிறார்கள். அதேநேரம் அரசு இதை அமல்படுத்தினால் மக்கள் தாராளமாக செலவு செய்வதன் மூலம் அரசுக்கு மீண்டும் வேறு வரிகள் மூலம் இந்த பணம் வர வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மக்கள் தாராளமாக செலவு செய்து வேண்டியதை வாங்கும் போது நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும். அதன்பிறகு உற்பத்தி செய்த பொருள்களை விற்கும் போதும் வாங்கும் போது அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் பொருளதார வல்லுனர்கள்.