திருடியவருக்கு வாய் சிவப்பா மாறும்.. மந்திரவாதி பேச்சைக்கேட்டு வேலைக்கார பெண்ணை தாக்கிய குடும்பம்!
டெல்லி: டெல்லியில், திருடியவருக்கு வாய் சிவப்பாக மாறும் என்று கூறிய மந்திரவாதியின் பேச்சை கேட்டு வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள சத்பரி என்ற இடத்தில் அன்சல் விலாஸ் என்ற சொகுசு பண்ணை வீடு உள்ளது.
இந்த வீட்டில் சில பெண்கள் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இந்த சூழலில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பாக பண்ணை வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயுள்ளது.
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் .. தரிசனத்திற்கு 2 நாட்கள் காத்திருப்பு..விஐபி தரிசனம் ரத்து
யார் திருடியிருப்பார்கள்?
இதனால் வீட்டின் குடும்பத்தினர் வீடு முழுவதும் அனைத்து இடங்களிலும் தேடிபார்த்துள்ளனர். ஆனால், பொருட்களை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர்கள், விலை உயர்ந்த பொருட்களை யார் திருடியிருப்பார்கள்? என்று யோசித்துள்ளனர். வெளிநபர்கள் வந்து திருட வாய்ப்பு இல்லை என்று கருதிய வீட்டின் உரிமையாளரான பெண், எப்படியும் நமது வேலையாட்கள்தான் திருடியிருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டுள்ளார்.
மூட நம்பிக்கையின் உச்சம்
ஆனால் பல பெண்கள் பணியாற்றுவதால், யார் திருடியிருப்பார்கள் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், வீட்டில் திருடியவர்களை கண்டுபிடிக்க பணக்கார பெண் எடுத்த முடிவுதான் மூடநம்பிக்கையின் உச்சம் என்று சொல்லலாம். தனக்கு தெரிந்த மந்திரவாதி ஒருவரை சந்தித்து நடந்த விஷயத்தை கூறியிருக்கிறார். மந்திரவாதியும் முழுக்கதையையும் கேட்டுவிட்டு தன்னால், திருடிய நபரை கண்டுபிடித்துவிட முடியும். இதற்கு சில பூஜைகள் செய்தால் ஈசியாக கண்டுபிடித்து விடலாம் என சொல்லியுள்ளார்.
மந்திரவாதியின் ஐடியா
இதை அப்படியே நம்பிய பணக்கார குடும்பத்தினர், அவர் கூறியதுபடி, திருடு நடந்து 10 மாதங்கள் கழித்து அதாவது, கடந்த 9 ஆம் தேதி பூஜைகள் நடைபெற்றுள்ளது. பூஜைகளை செய்த மந்திரவாதி தன்னுடன் சில உணவு பொருட்களையும் எடுத்து வந்துள்ளார். வீட்டில் வேலை செய்யும் அனைவரையும் தன் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்றும், நான் அளிக்கும் உணவை அவர்கள் அனைவரும் சாப்பிட வேண்டும் என்று மந்திரவாதி கூறியுள்ளார். மேலும், நான் அளிக்கும் உணவை சாப்பிடும் பெண்களில் யார் வாய் சிவப்பாக மாறுகிறதோ அவர்தான் பொருட்களை திருடியிருக்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளரிடம் சொல்லியிருக்கிறார்.
ஒரு பெண்ணுக்கு மட்டும் வாய் சிவந்துள்ளது
இதன்படி, வேலை செய்யும் பெண்களுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவை சாப்பிட்ட பல பெண்களில் 43 வயதான ஒரு பெண்ணுக்கு மட்டும் வாய் சிவந்துள்ளது. உடனே மந்திரவாதி, உங்கள் வீட்டில் வாங்கிய பொருட்களை திருடிய பெண் இவர்தான் என்று கைகாட்டியுள்ளார். இதை உடனே நம்பிய வீட்டின் உரிமையாளர், அந்தப் பெண்ணை ஆடைகளை அவிழ்த்து கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் வெளியே விடாமல் வீட்டிற்குள் உள்ள ஒரு அறையில் ஒருநாள் முழுக்க அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.
அவமானம் தாங்காமல் விபரீத முடிவு
இதனால், அவமானமாக உணர்ந்த அந்தப்பெண், கழிவறை செல்ல வேண்டும் தனது ஆடைகளை கொடுங்கள் என கேட்டுள்ளார். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் கதவை திறந்து அனுமதித்ததும், கழிவறை சென்று எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் உடல் நலம் குன்றி உயிருக்கு போராடும் நிலைக்கு வந்த பெண், எலி மருந்தை சாப்பிட்டதை வீட்டின் உரிமையாளரிடம் கூறினார். பெண் இறந்துவிட்டால் நாம் மாட்டிக்கொள்வோம் எனப் பதறிய வீட்டின் உரிமையாளர் உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு
மருத்துவமனையில் அனுமதித்த பிறகுதான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்தக்கு வந்துள்ளது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த டெல்லி மைதாங்கரி போலீசார், புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு இந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.