திருவனந்தபுரம் உட்பட 3 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்திற்கு குத்தகை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: திருவனந்தபுரம், ஜெய்ப்பூர் மற்றும் குவஹாத்தி ஆகிய நகரங்களின் விமான நிலையங்களை அரசு தனியார் பங்களிப்புடன் குத்தகைக்கு விடுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து, இதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
அதேநேரம், இந்த முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைக்காது என முதல்வர் பினராயி விஜயன் தெரிிவித்துள்ளார்.
அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை.. எச்.ராஜாவை விளாசிய அதிமுக நிர்வாகி.. என்னாச்சு?
50 வருட குத்தகை
அமைச்சரவை முடிவுக்கு பிறகு, பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், இந்த விமான நிலையங்களை நிரந்தரமாக தனியார் பங்களிப்புக்கு வழங்கப் போவது கிடையாது. இது 50 வருட குத்தகை கால ஒப்பந்தம். இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தை சிறுநகரங்களில் விமான நிலையங்களை அமைப்பதற்கு இந்திய விமானநிலைய ஆணையம் பயன்படுத்தும் என்று தெரிவித்தார்.
அதானி நிறுவனத்திடம் 6 ஏர்போர்ட்
ஓராண்டுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் மங்களூர், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் விமான நிலையங்களும் 50 வருட குத்தகைக்கு வழங்கப்படுவதற்கான முடிவு மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்டது. அதானி நிறுவனம் இந்த மூன்று விமான நிறுவனங்களின் குத்தகையை பெற்றுள்ளது. தற்போது திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், குவஹாத்தி விமான நிலையங்களும் அதானி நிறுவனத்திடம் தரப்படும், என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளன.
கட்டணம்
ஒரு பயணிக்கு இவ்வளவு கட்டணம் என்ற நடைமுறையை இந்திய விமான நிலைய ஆணையம் கையில் எடுத்துள்ளது. மாத அடிப்படையில் ஒரு பயணிக்கு இவ்வளவு தொகை என்று குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் அமைப்பு விமானநிலைய ஆணையத்துக்கு செலுத்த வேண்டும்.
Recommended Video
பினராயி விஜயன் எதிர்ப்பு
இதனிடையே திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு வழங்க, கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் மோடிக்கு, பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், "மாநில அரசு முன்வைத்த வாதங்களை ஏற்காமல் மத்திய அரசு எடுத்த ஒருதலைப்பட்ச முடிவைப் பார்க்கும்போது, இந்த முடிவைச் செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்குவதில் எங்களுக்கு சிரமம் இருக்கிறது என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். இது எங்கள் மாநில மக்கள் விருப்பத்திற்கு எதிரானது" என்று மோடிக்கு எழுதிய கடிதத்தில் பினராயி விஜயன் கூறியுள்ளார்.