சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த அதிரடி சாட்டை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
டெல்லி: சமூக வலைத்தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர்.
புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்து ஆபாச படங்களை சமூக வலைதளம் நீக்க வேண்டும்.சமூக வலைதள நிறுவனங்கள் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்பந்தமான விரிவான தகவல்களை வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஓடிடியில் 13+, 16+ அடல்ட் என திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும் என்றும் புதிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
தொடர் புகார்கள்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த குற்றங்கள் நடைபெறுதில் முக்கிய பங்கு வகிப்பது சமூக வலைதளங்கள் என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வந்தது. அதிலும் சில ஓடிடி தளங்களில் ஆபாசங்கள் குவிந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
மத்திய அரசு-டுவிட்டர் மோதல்
சமுக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு தகவல்களையும், ஆபாசங்களையும் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. டெல்லி வன்முறை தொடர்பான கருத்துக்களை வெளியிட்ட பெரும்பாலான டுவிட்டர் கணக்குகளை தடை செய்யும்படி மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தியது. ஆனால் டுவிட்டர் இதற்கு மறுத்ததால் மத்திய அரசு-டுவிட்டர் இடையே மோதல் மூண்டது.
வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இதனால் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு சாட்டை எடுக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டனர்.
ஆபாச படம் நீக்க வேண்டும்
அதில் கூறியுள்ள நெறிமுறைகளை பின்வருமாறு காணலாம்:-
* புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்து ஆபாச படங்களை சமூக வலைதளம் நீக்க வேண்டும்.
* சமூக வலைதள நிறுவனங்கள் மாதம் ஒருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்பந்தமான விரிவான தகவல்களை வழங்க வேண்டும்.
* புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
* தவறான தகவலைப் பரப்பக்கூடிய நம் முதல் நபர் யார் என்ற தகவலை சமூக வலைத்தளங்கள் கண்டறிய வேண்டும்.
ஓடிடியில் திரைப்படங்கள் வகைப்படுத்த வேண்டும்
* அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை கிடைக்கும் வழக்குகளாக எடுத்துக்கொள்ளப்படும்.
* அரசு அல்லது நீதிமன்றம் தகவல்களை கேட்டால் சமூக வலைத்தளங்கள் நிச்சயம் வழங்க வேண்டும்.
* ஓடிடி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை உருவாகுவது அவசியமாகிறது.
* ஓடிடியில் 13+, 16+ அடல்ட் என திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும்.
வாட்ஸ்-அப் 53 கோடி பேர்
இந்தியாவில் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 53 கோடி ஆகும். யூடியூப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 44.8 கோடி, பேஸ்புக் 41 கோடி பேரும், இன்ஸ்டாகிராம் 21 கோடி பேரும், ட்விட்டர் 1.75 கோடி பேரும் பயன்படுத்தி வருவதாக வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.