வரலாறு காணாத வெப்பத்தில் தகிக்கும் டெல்லி.. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால் வீடுகளில் முடங்கிய மக்கள்
டெல்லி: நாடு முழுவதையும் வாட்டி வதைத்து வரும் கோடை வெப்பமானது இன்னும் குறைந்தபாடில்லை. வட இந்தியாவை பொறுத்த வரை கடுமையான வெப்பமும், அனல் காற்றும் தொடர்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடும் வெப்பத்தின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், வட மாநிலங்கள் மற்றும் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் வெப்ப அலை வீசுகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று வெப்ப நிலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதே நிலை நீடித்தால் டெல்லியில் விரைவில் வெப்ப நிலை இதுவரை இல்லாத உச்ச நிலையை எட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்ப அலைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நண்பகல் மற்றும் வெயில் அதிகமாக உள்ள நேரங்களில் மக்கள் வெளியே வருவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியை போலவே ராஜஸ்தான் மாநிலத்திலும் வெயில் கடுமையாக காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகரை தாளித்து எடுக்கும் வெப்பம்
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொளுத்தி வரும் வெயிலானது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை டெல்லியில் 46.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும், நேற்று 44.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக தலைநகர் வாசிகள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், டெல்லியின் பல பகுதிகளில் வெப்பம் கடுமையாக இருந்தாலும், டெல்லி - என்சிஆர் பகுதியில் கடும் வெப்ப அலை நீடித்து காணப்படுவதாக கூறியுள்ளது.
வியர்வை மழையில் குளித்த மக்கள்
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கொளுத்திய வெப்பத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. டெல்லியின் பாலம் என்ற பகுதியில் 116 டிகிரி வெப்பம் பதிவானதால், அப்பகுதி மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த 2012-ம் ஆண்டில் அங்கு 117 டிகிரி வெப்பம் கொளுத்தியதே அதிகபட்ச வெப்பமாக இருந்து வருகிறது. இந்நிலைளில் அதற்கு 1 டிகிரிக்கும் குறைவாக, கடந்த இரு நாட்களாக வெயில் வெளுத்து வாங்கியதில், மக்கள் புழுக்கத்திலும் வியர்வை மழையிலும் நனைந்து அவதியுற்றனர். அடித்த வெயிலுக்கு வீட்டிலேயே இருக்க முடியாத சூழலில், வீட்டை விட்டு வெளியேறவே மக்கள் அஞ்சுகின்றனர்.
அபாய எச்சரிக்கை
வானிலை மாற்றங்கள் குறித்து எச்சரிக்கை செய்ய வானிலை ஆய்வு மையம் நான்கு வண்ணங்களை பயன்படுத்துகிறது. அவையாவன பச்சை, மஞ்சள், அரக்கு மற்றும் சிவப்பு வண்ணங்களாகும். இதில் பச்சை நிறம் ஆபத்தில்லாத இயல்பான வெப்பநிலையை குறிக்கும். ஆனால் சிவப்பு நிறமாது அபாயத்தை குறிக்க கூடிய தாறுமாறான வெப்பநிலை ஆகும். தலைநகர் டெல்லியில் கடந்த இரு நாட்களாக வெளுத்தெடுத்த வெயிலின் காரணமாக, சிவப்பு நிற அலர்ட்டை வானிலை மையம் அளித்துள்ளது. மேலும் அடுத்து வரும் 4 முதல் நாட்களுக்கு டெல்லியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையே காணப்படும் என்றும் எச்சரித்துள்ளது. பொதுவாக வெப்ப அலையால் அதிகபட்ச வெப்பநிலையாக தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு 45 டிகிரி செல்சியஸ் பதிவாகும் போதும், அது 47 டிகிரி செல்சியஸ் அளவை நெருங்கும் என்னும் போதும் ரெட் அலர்ட் விடுக்கப்படுவது வழக்கம்.
புழுதி புயலுக்கு வாய்ப்பு
கடும் வெயில் கொளுத்தி வருவதன் காரணமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவ மழை தாமதமாக துவங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் பிற்பகுதிக்குள் பருவமழைக்கு வட இந்தியாவில் சாத்தியம் இல்லை என்றே வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். நாளை முதல் காற்றின் திசை மாறும் என கூறியுள்ள வானிலை முன்னறிவிப்பாளர்கள், வங்காள விரிகுடாவில் இருந்து கிழக்கு திசை நோக்கி வரும் காற்று உத்திரப்பிரதேசம் வழியாக டெல்லி-என்.சி.ஆர் பகுதிக்கு வரும் என கூறியுள்ளனர். இதனால் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தூசி புயல் அல்லது வானத்தில் பலத்த இடிக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் உயர் வெப்பநிலை காரணமாக, ஓசோன் படலத்தில் மாசு அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.