அமெரிக்காவும் சீனாவும் அப்படி செய்தால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு.. சுவாமி எச்சரிக்கை
டெல்லி: சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க சீனா அமெரிக்கா முடிவு செய்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்திற்கு உதவி செய்யும் நாடுகளுக்கான கருப்பு பட்டியலில் வைக்க வேண்டியதற்கு பதிலாக தற்போது உள்ள சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கினால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தள்ளார்.
நாம் ஏன் சர்வதேச அளவில் வீழ்ச்சியடைகிறோம் என்பதைக் கண்டறிய பிரதமர் நரேந்திரமோடி ஒரு மதிப்பாய்வை நடத்த வேண்டும் என்றும் மாநிலங்களவை எம்பியான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சிஏஏவுக்கு எதிராக புதுவை பல்கலை.யில் கண்ணன் கோபிநாத் பேச்சு.. ஏபிவிபி எதிர்ப்பு.. பரபரப்பு
தீவிரவாத தடுப்பு
தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு உதவி செய்ததாக பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதன் அடிப்படையில் சர்வதேச நிதி அமைப்பால் கிரேட் லிஸ்ட் எனப்படும் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. FATF என்று அழைக்கப்படும் சர்வதேச அளவில் பரிமாற்றப்படும் நிதிகளை கண்காணிக்கும் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் பாரிஸில் நடந்தது.
கருப்பு பட்டியல்
அப்போது தீவிரவாதத்திற்கு உதவி வரும் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல நாடுகள் சார்பில் வைக்கப்பட்டது. ஆனால் சீனாவின் ஆதரவு காரணமாக அது நடக்கவில்லை. எனினும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வரும் 2020 பிப்ரவரி மாதம் வரை (4 மாதங்கள்) அவகாசம் அளித்து பாகிஸ்தானுக்கு சர்வதேச தீவிரவாதிகளுக்கான நிதித்தடுப்பு அமைப்பு(எப்ஏடிஎப் ) எச்சரிக்கை விடுத்திருந்தது.
பாகிஸ்தான்
இதன்படி தீவிரவாத இயக்கங்கள் மீது பிப்ரவரி மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க தவறினால் உலக நாடுகளிடமிருந்து நிதியுதவியை பெறுவதற்கு பாகிஸ்தான் நிரந்தரத் தடைக்கு ஆளாகி கருப்புப் பட்டியலில் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. தற்போதைய நிலையில் அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் வடகொரியா கருப்பு பட்டியலில் உள்ளது.
|
அமெரிக்கா முடிவு
இந்நிலையில் பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்து வருவதால் அதன் மீதான சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் தான் சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க சீனா அமெரிக்க முடிவு செய்திருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
உலக அரங்கில் முயற்சி
சுப்பிரமணியன் சுவாமியின் கூற்றுப்படி, தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு உதவி செய்து வரும் பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் இருந்து கருப்பு பட்டியலுக்கு மாற்றுவதற்கு பதில் சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் அது இந்தியாவுக்கு சர்வதே அரங்கில் பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தும் இந்திய அரசின் முயற்சிக்கு பின்னடைவாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.