உலகில் மிகப்பெரிய நடிகர் மோடிதான்.. போறபோக்கில் அமிதாப் மாமாவையும் வம்பிழுத்த பிரியங்கா காந்தி
டெல்லி: உத்தரப்பிரதேசததில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இந்த உலகிலேயே மிகப்பெரிய நடிகரான மோடிக்கு பதில் அமிதாபச்சனை மக்கள் பிரதமராக தேர்ந்தெடுத்து இருக்கலாம் என விமர்சித்தார்.
நடிகர் அமிதாப்பச்சன் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தார். ஆனால் போபர்ஸ் ஊழல் பிரச்னை எழும்பிய போது அமிதாப் பச்சன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்ததோடு, ராஜிவ் காந்தி குடும்பத்தினரை விட்டு ஒதுங்கியே இருந்தார்.
அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். அதேநேரம் அமிதாப் பச்சன் பாஜக உடன் நெருக்கமாக இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் சுற்றுலா தூதராக அமிதாப் பச்சன் செயல்பட்டு வருகிறார்
இந்நிலையில் இறுதி கட்ட மக்களவை தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடக்கிறது. அதன்பிறகு 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மோடியை கிண்டல் செய்ய நினைத்து, ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியிடம் மாட்டிக்கொண்ட ராகுல் காந்தி
இதனால் இறுதி கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிரமாக மேற்கொண்டார். அவர் அலகாபாத்தில் இருந்து மிர்சாப்பூர் வரை சுமார் 85 கிலோமீட்டர் தூரம் பயணித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பிரியங்கா காந்தி பேசுகையில், "மக்களே நீங்கள் ஒரு விஷயத்தை கட்டாயம் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் பிரதமர் தான் உலகின் மிகப்பெரிய நடிகர். எனவே அவருக்கு பதில் நீங்கள் பிரதமராக அமிதாப் பச்சனை தேர்ந்தெடுத்து இருக்கலாம். ஆனால் இவர்கள் யாரும் உங்களுக்காக எதுவும் செய்யமாட்டார்கள்" என்றார். மோடி, அமிதாப் இருவருமே பிரதமர் பதவிக்கு தகுதி இல்லாதவர்கள் என்றும் இருவருமே மக்களுக்காக எதுவும் செய்யமாட்டார்கள் என்ற ரீதியில் பிரிங்கா காந்தி நேற்று பேசியிருப்பது அமிதாப்பையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும்.