பலாத்காரம்.. மிட்நைட் பேச்சுவார்த்தை! பாஜக எம்பிக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம்
டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்காலால் பாலியல் தொல்லைக்கும், பயிற்சியாளர்களால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக கூறி மல்யுத்த வீராங்கனைகள்/வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனை குறித்து தீர்வு காண நேற்றிரவு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் எந்த இறுதி முடிவும் எட்டப்படாததால் இரண்டாவது நாளாக வீரர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்திருக்கின்றனர்.
இந்த போராட்டத்தில் உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற விக்னேஷ் போகத், சரிதா, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார் 30 வீரர்/வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போராட்டத்திற்கு ஹிரியான முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டம் குறித்து விக்னேஷ் போகத் கூறுகையில், "லக்னோ தேசிய மல்யுத்த பயிற்சி முகாமில் பயிற்சி பெறும் வீராங்கணைகள் அங்குள்ள பயிற்சியாளர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கால் 10க்கும் அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் எங்களிடம் புகாரளித்துள்ளனர். பிரதமரும் உள்துறை அமைச்சரும் எங்களை அழைத்து பேசும்பட்சத்தில் இந்த பெயர்களை நாங்கள் அவர்களிடம் தெரிவிப்போம். இந்த விஷயம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று கூறிய நிலையில் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.
கேட்கவே பதறுதே.. சிறுமியை பலாத்காரம் செய்த முன்னாள் ராணுவ வீரர்! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்
நம்பிக்கை
எங்களுக்கு நீதி வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவி விலக வேண்டும். பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இந்த கோரிக்கை நிறைவேறும்வரை எங்கள் வீரர்கள் எவ்வித நிகழ்வுகளிலும் பங்கேற்க மாட்டார்கள். தவறு செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைத்தாக வேண்டும்" என்று கூறியுள்ளார். அதேபோல ஷாக்ஷி மாலிக் கூறுகையில், "ஒட்டுமொத்த கூட்டமைப்பும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் புதிய மல்யுத்த வீரர்கள் நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும விளையாட முடியும்.
அழுக்கு
கீழ் நீலையில் அழுக்கு அதிகமாக சேர்ந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பேசி முழு விவவரத்தையும் தெரிவிப்போம்" என்று கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் சிங் மறுத்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த 10 ஆண்டுகளில் கூட்டமைப்பில் எந்த பிரச்னையும் இல்லையா? புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும்போது இதுபோன்று பிரச்னைகள் எழும். இவர்கள் குற்றம்சாட்டுவதைப்போல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் நானே தூக்கிட்டுக்கொள்வேன். இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் நான் ஒத்துழைக்க தயார்" என்று கூறியுள்ளார்.
விளக்கம்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 72 மணி நேரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று மல்யுத்த கூட்டமைப்புக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருக்கிறது. அவ்வாறு பதிலளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றம் கடித்தில் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு(ஜன.19) 10.30 மணியளவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் விளையாட்டு வீரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை அதிகாலை 1.45 வரை நீடித்த நிலையில் வீரர்கள் அனுராக் தாக்கூர் வீட்டிலிருந்து வெளியேறினர்.
உறுதி
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. எனவே மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு தரப்பில் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வீரர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.