லோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்
Recommended Video
டெல்லி: குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக லோக்சபாவில் அதிமுக எம்பி ரவீந்திரநாத், திமுக எம்பிக்கள் பேச்சுக்கு பதிலடி கொடுப்பதை போல பேசினார்.
தேனி தொகுதியிலிருந்து, அதிமுக சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ரவீந்திரநாத் குமார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகனான இவர் மட்டுமே, அதிமுக கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பியாகும்.
ஒரு பக்கம் திமுக கூட்டணியை சேர்ந்த 37 எம்பிக்கள் அமர்ந்திருக்க, அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் குமார், அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம், பதில் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
தயாநிதி மாறன் உரை
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும், தீர்மானத்தின் மீது, நேற்று உரை நிகழ்த்திய, திமுக எம்.பி., தயாநிதி மாறன், தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும், ஆனால், அரசு ஊழலில் குறிக்கோளாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி பேசினார். ஆனால், அதை எதிர்த்து பாஜக எம்பிக்கள் குரல் கொடுத்தனர்.
ரவீந்திரநாத் பேச்சு
இந்த நிலையில், லோக்சபாவில் இன்று, ரவீந்திரநாத் குமார் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார். குடிநீர் பிரச்சினையை தீர்க்க, அரசு ஏகப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திட்டப் பட்டியல்களை தர நான் தயார். திமுகவினர் தேவைப்பட்டால் படித்து பார்க்கலாம். இவ்வாறு ரவீந்திரநாத் பேசிக் கொண்டிருந்தபோது, திமுகவினர் அதுகுறித்து இங்கு பேசக்கூடாது என கோஷமிட்டனர்.
கூச்சல், குழப்பம்
வேறு சில கட்சி எம்பிக்களும், மாநில பிரச்சினைகளை பற்றி லோக்சபாவில் பேச கூடாது என கோஷமிட்டனர். கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதால், தனது உரையை பாதியிலேயே நிறுத்திக்கொண்டார், ரவீந்திரநாத். முன்னதாக தமிழக அரசை ஊழல் அரசு என தயாநிதி மாறன் குறிப்பிட்டதை, ரவீந்திரநாத் கண்டித்தார். ரவீந்திரநாத் குமாருக்கு, லோக்சபாவில் இது 2வது பேச்சு ஆகும். முன்னதாக, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, உரையாற்றிய, அவர், மோடியின் முகத்தில் நான் வீர விவேகானந்தரை பார்க்கிறேன் என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் மணியன்
இதனிடையே, டெல்லியில் இன்று மதியம் நிருபர்களை சந்தித்த தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "ஊழலை விஞ்ஞானப்பூர்வமாக செய்வது எப்படி என கற்றுக் கொடுத்தது திமுக. அதிலும், தயாநிதி மாறன், அருகே ராசாவை உட்கார வைத்துக் கொண்டு ஊழல் பற்றி லோக்சபாவில் பேசியது, தமிழக மக்களுக்கு நகைப்புக்குரிய செய்தியாக மாறியுள்ளது" என்று கிண்டலாக தெரிவித்தார்.